மாஞ்சோலை வன பகுதிகளில் பெய்த மழையால் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்ததையடுத்து பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறை இன்று தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் பத்து நாட்களுக்கும் மேலாக பரவலாக வெயில் வாட்டி வருகிறது. இந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் மலையடிவாரப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை மாலை அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு, மாஞ்சோலை, பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், கடையம் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் பலத்த மழை பெய்தது.
மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டப் பகுதிகளில் பெய்த மழையால் சனிக்கிழமை காலை மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். நீர்வரத்து குறைந்த பின் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் பல்வேறு ஊர்களிலிருந்து மணிமுத்தாறு அருவியில் குளிக்க வந்தப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.





