பீகாரில் 60 அடி நீளமுள்ள 500 டன் எடை கொண்ட
இரும்பு பாலத்தை கடந்த சில தினங்களுக்கு முன்னர், சட்ட விரோதமாக தகர்த்த வழக்கில் இரண்டு அரசு அதிகாரிகள்(ஒரு துணைப் பிரிவு அதிகாரி மற்றும் ஒரு வானிலை துறை அதிகாரி) உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீகார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டம் ஆமியாவார் கிராமத்தில் 50 ஆண்டு பழமையான 60 அடி நீள இரும்பு பாலம் உள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பாலத்தை சிலர் ஜே.சி.பி எந்திரம், கியாஸ் கட்டர் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி வெட்டி எடுத்து அலேக்காக கொண்டு சென்று விட்டனர். திடீரென பாலம் காணாமல் போனதை கண்ட கிராமமக்கள் இது பற்றி போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் அதிகாரிகள் என சொல்லி ஒரு கும்பல் இந்த நூதன கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்தகும்பலை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
விசாரணையில் இந்த திருட்டு பட்டப்பகலில் தான் நடந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. நீர்ப்பாசனத் துறையுடன் இணைந்து பணியாற்றும் அரசு அதிகாரிகள் போல் காட்டிக் கொண்ட கொள்ளையர்கள் சிலர், கைவிடப்பட்ட பாலத்தை உடைக்க எரிவாயு கட்டர் மற்றும் மண் அள்ளும் இயந்திரங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
இரண்டு நாட்கள் தொடர்ந்து ‘உழைத்து’ பாலத்தை அகற்றியுள்ளனர். பாலத்தை அகற்ற கிராம மக்கள் நீர்ப்பாசனத்துறையிடம் ஏற்கனவே விண்ணப்பம் செய்துள்ளதால் அதிகாரிகள் உண்மையிலேயே வந்து அகற்றுவதாக நினைத்து விட்டதாக பொதுமக்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந்த திருட்டு சம்பவத்தில் வானிலைத் துறை அதிகாரி அரவிந்த் குமார், எரிவாயு கட்டர்கள் மற்றும் பிற உபகரணங்களுடன் ஆயுதம் ஏந்திய குழுவை வழிநடத்தியுள்ளார். இந்த குழுவினர் சில நாட்களுக்கு முன்பு பாலத்தை அகற்றினர்.
வெறும் 3 நாட்களில் பாலம் முழுவதும் துண்டிக்கப்பட்டு காணாமல் போனது.அந்த ஸ்டீல் கட்டமைப்பு பாலம் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததால், யாரும் புகார் தெரிவிக்கவில்லை.
அந்த மாவட்டத்தின் துணை வட்ட அதிகாரியான ராதே ஷியாம் சிங், இந்த திருட்டு சம்பவத்தில் மூளையாக இருந்துள்ளார். ராதே ஷியாம் சிங், மேலும் ஆறு கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து ஒரு ஜேசிபி, திருடப்பட்ட 247 கிலோ எடையுள்ள இரும்பு சேனல்கள் மற்றும் பிற பொருட்களை போலீசார் மீட்டுள்ளனர். ஜேசிபி இயந்திரம் மற்றும் பிக்-அப் வேன், சட்டவிரோத நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட கேஸ் கட்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்
தற்போது இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக நீர்வளத் துறையின் துணைப் பிரிவு அதிகாரி (எஸ்டிஓ) உட்பட எட்டு பேரை பீகார் காவல்துறை கைது செய்துள்ளதாக காவல்துறை கண்காளிப்பாளர் ஆஷிஷ் பார்தி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு ஜேசிபி, திருடப்பட்ட 247 கிலோ எடையுள்ள இரும்பு கம்பிகள் மற்றும் பிற பொருட்களை போலீசார் மீட்டுள்ளனர்.






