தமிழகம் மட்டும் அல்லாது உலகளவில் பிரபலமான
பிரசித்தி பெற்ற மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவிலில் இன்று இரு ஆண்டுகளுக்குப்பிறகு தேரோட்டம் நடந்தது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவிலில் 100 ஆண்டுகளுக்குப்பிறகு கடந்த 2015-ம் ஆண்டு முதல் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. 2 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் இன்று தேரோட்டம் துவங்கி நடந்தது.
ஆண்டுதோறும் 18 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும்
தஞ்சை பெரிய கோவில் திருவிழா இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி வீதியுலா நடந்தது. இதையடுத்து இன்று காலை முக்கிய விழாவான திருத்தேரோட்டம் தொடங்கியது. இதில் ஆயிரங்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்
தேரோட்டத்தின்போது முதலில் விநாயகர், அவரை தொடரந்து சுப்பிரமணியர், தியாகராஜர் உடன் அம்மன் திருத்தேர், தனி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் ஒன்றன்பின் ஒன்றாக நான்கு ராஜ வீதிகளான மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி, கீழராஜவீதி, தெற்கு ராஜ வீதிகளில் சென்றனர்.
முக்கிய இடங்களில் பக்தர்கள் வசதிக்காகவும், சுவாமி தரிசனத்துக்காகவும், தேங்காய், பழம் படைப்பதற்காகவும் திருத்தேர் நிறுத்தப்பபட்டது. அத்துடன், தேரோடும் 4 வீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தேர் தடையின்றி செல்லும் வகையில் புதிதாக தார்சாலையும் அமைக்கப்பட்டு இருந்தது. விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு இடங்களிலும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டிருந்தது.






