உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழாவில் முக்கிவிழாவான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை தமிழ்புத்தாண்டு நாளில் நடைபெறுவதையொட்டி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருக்கல்யாண மேடை மட்டும் ரூ.25 லட்சம் செலவில் பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா ஏப் 5முதல் நடந்து வருகிறது. விழாவின் 8-ம் நாளான நேற்று இரவு மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
மீனாட்சி அம்மனுக்கு வைர கற்கள் பதிக்கப்பட்ட ராயர் கிரீடம் எனப்படும் வைர கிரீடத்திற்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது.
பின்னர் மீனாட்சி அம்மனுக்கு அந்த வைர கிரீடம் சூட்டி நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்கத்தினால் ஆன செங்கோல் வழங்கப்பட்டது. அப்போது மீனாட்சி அம்மனுக்கு மீன்கொடியும் வழங்கப்பட்டது. இளஞ்சிவப்பு நிற பட்டு புடவையில் காட்சி தந்த மீனாட்சி அம்மனுக்கு பரிவட்டம் கட்டி வேப்பம்பூ மாலையும் அணிவிக்கப்பட்டது. பிறகு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
பின்பு மீனாட்சி அம்மனிடமிருந்த செங்கோல் அம்மன் பிரதிநியாக கோவில் தக்கார் கருமுத்து கண்ணனிடம் வழங்கப்பட்டது. அவர் செங்கோலை பெற்று கொண்டு சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் அம்மனிடம் வழங்கினார்.
சித்திரை விழாவில் முத்தாய்ப்பாக மீனாட்சி திருக்கல்யாணம் நாளை தமிழ்புத்தாண்டில் ஏப் 14-ந் தேதி நடைபெறுகிறது. காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் வடக்கு, மேற்கு ஆடி வீதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே திருக்கல்யாணத்தை பக்தர்கள் காணுவதற்கு 500, 200 ரூபாய் டிக்கெட்டுகள் தற்போது விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் பக்தர்கள் திருக்கல்யாணத்தை அமர்ந்து பார்ப்பதற்கு வசதியாக பந்தல் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
மதுரை நகரமும், கோவிலை சுற்றி உள்ள வீதிகளும் விழாக்கோலம் பூண்டு உள்ளன. திருக்கல்யாண மேடை மட்டும் ரூ.25 லட்சம் செலவில் பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர திருக்கல்யாணம் முடிந்த பின்னர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரருடன் திருக்கல்யாண கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
திருக்கல்யாணத்தை காண வரும் அனைத்து பக்தர்களும் பிரசாதம் வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. லட்சக்கணக்கான பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து வழங்கவும் மதுரை நகரில் பல்வேறு இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.






