நேபாள நாட்டைச் சேர்ந்த 16 வயது இளைஞர், கடவுளின் மறு அவதாரம் என போற்றப்பட்டு வருகிறார். இவரது முதுகில் வளரும் 70 செ.மீ.
நீள முடி குறித்த விஷயம் வைரல் ஆகியுள்ள நிலையில், பலரும் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
இந்த இளைஞரின் பெயர் தேஷாந்த் அதிகாரி ஆகும். இவரது முதுகில் வளரும் முடி குறித்த விஷயத்தை இவர் வெளியுலகிற்கு தெரிவித்த போது, அதை கேள்விபட்ட மக்கள் பலரும் அதிர்ச்சி அடைய தொடங்கினர்.
முதுகு தண்டுவடம் முடியும் பகுதியில் இவருக்கு முடி வளர்ந்து கொண்டிருக்கிறது. தேஷாந்த் அதிகாரி பிறந்து சில நாட்களிலேயே, அவர் முதுகில் முடி வளர்ந்து கொண்டிருப்பதை அவரது பெற்றோர் கவனித்து விட்டனர்.
இதைத் தொடர்ந்து, அருகாமையில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனையாக அவர்கள் படியேறி இறங்கியது தான் மிச்சம். எவ்வளவு சிகிச்சைகள் செய்தும் கூட முடி வளருவதை தடுக்க முடியவில்லை.
குறிப்பாக, வெளிநாட்டு மருத்துவர்களிடம் இருந்து கூட ஆலோசனைகளை கேட்டு பார்த்தனர். ஆனால், எதுவுமே தீர்வு தரவில்லை.
மருத்துவர்களை அணுகி எந்தத் தீர்வும் ஏற்படவில்லை என்ற நிலையில், உள்ளூர் சாமியார் ஒருவரை சந்தித்து, இதுகுறித்து தேஷாந்தின் பெற்றோர் தெரிவித்தனர்.
அப்போது, கடவுள் அனுமரின் மறு அவதாரம் தான் தேஷாந்த் அதிகாரி என்று அந்த சாமியார் கூற, அதைக் கேட்ட பெற்றோர் மகிழ்ச்சி அடைந்து விட்டனர்.
இந்த வாலால் பெரிய அளவுக்கு தொந்தரவு எதுவும் தேஷாந்துக்கு ஏற்படவில்லை. இந்நிலையில், அவர் இதுகுறித்து வெளியுலகிற்கு பகிரங்கப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “வழக்கத்திற்கு மாறாக வால் போல முடி வளர்ந்து கொண்டிருப்பது தொடக்கத்தில் எனக்கு அதிர்ச்சியாகத் தான் இருந்தது. இப்போது அதை வெளியுலகிற்கு தெரிவிக்கலாம் என எனது பெற்றோர் விரும்பினார்கள்.
எனக்கும் வால் போன்ற முடியை வெளியுலகிற்கு காண்பிப்பதில் எந்த வித தயக்கமோ, அசௌகரியமோ இல்லை. என்னை குறித்த வீடியோ ஒன்று டிக் டாக்கில் வைரல் ஆனது. இதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
மக்கள் சிலர் என்னை அனுமார் என்றும், சிவாஜி சாமி என்றும் அழைக்கின்றனர்” என்று தேஷாந்த் அதிகாரி குறிப்பிட்டார். மக்களின் நம்பிக்கை ஒருபுறம் இருக்க, உடலில் ஏற்படும் மரபு ரீதியான மாற்றங்களால் இதுபோன்ற சில விஷயங்கள் நிகழுகின்றன.
வெவ்வேறு மரபணு குறைபாடுகளைக் கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்யும்போது, அந்த பெண்ணின் கருவில் வளரக் கூடிய குழந்தைக்கு இதுபோன்ற வித்தியாசமான வளர்ச்சி ஏற்படக் கூடும்.
முன்னதாக, நம் நாட்டின் மத்தியப் பிரதேச மாநிலத்திலும் விசித்திரமாக குழந்தை ஒன்று பிறந்தது. இரண்டு தலை மற்றும் 3 கைகளுடன் அந்த குழந்தை இருந்தது.
இந்தக் குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றாலும் கூட, இதுபோன்று உறுப்புகள் விசித்திரமாக அமையும் குழந்தைகள் பெரும்பாலும் உயிர் பிழைப்பதில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.