உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா முத்தாய்ப்பான விழாவாக அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபோகம் இன்று நடந்தது. பக்தர்களின் கோவிந்தா அழகா..கள்ளழகா..கோஷம் முழங்க வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி, தங்க குதிரையில் அமர்ந்து கள்ளழகர் எழுந்தளினார்.
மாமதுரையில் சித்திரை பெருந்திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 2 ஆண்டுகளாக பரவிய கொரோனா தொற்று குறைந்ததால்
இந்த ஆண்டுக்கான விழாவுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் மதுரை மாநகரமே விழாக்கோலத்தில் காணப்பட்டது.
விழா நாட்களில் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மதுரை மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சித்திரைத் திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் தமிழ் புத்தாண்டு சுபதினத்தில் கோலாகலமாக வேத பாராயணமுறைப்படி நடைபெற்றது.
சித்திரைத்திருவிழாவின் 11-வது நாளான வெள்ளிக்கிழமை மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. சுந்தரேசப்பெருமான் பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர்.
சித்திரை திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியான உலகப்புகழ்பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி எழுந்தருளும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
முன்னதாக வெள்ளிக்கிழமை தங்கப்பல்லாக்கில் கண்டாங்கி பட்டு கட்டு வேல் கம்புடன் கள்ளழகர் கோலத்தில் மதுரைக்கு வந்த அழகருக்கு மூன்று மாவடியில் எதிர்சேவை நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை வந்த கள்ளழகரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சர்க்கரைக் கிண்ணத்தில் தீபம் ஏற்றியும் பாரம்பரிய சடங்குகளும் வழிபாடு நடத்தியும் அழகரை எதிர்கொண்டு வரவேற்று வணங்கினர்.
இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் எழுந்தருளிய அழகர், இரவு முழுவதும் மக்களுக்கு ஆசி வழங்கிய பின்னர் நூபுரகங்கை தீர்த்தத்தினால் அழகுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட அழகர் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்துகொண்டு இன்று அதிகாலை மூன்று மணிக்குத் தங்கக்குதிரையில் ஏறி 5 மணிக்கு வைகை ஆற்றுக்கு வந்துசேர்ந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் விசிறிகளை வீசியும் ஆண்டுத் தோலில் செய்த பையில் தண்ணீர் நிரப்பி தண்ணீரை பீய்ச்சியடித்தும் வரவேற்றனர்.
வைகை ஆற்றுக்கு தங்கக் குதிரைவாகனத்தில் ஏறி வந்த கள்ளழகரை வெள்ளிக்குதிரை மீதேரி வந்த வீரராகவப்பெருமாள் எதிர்கொண்டு வரவேற்றார். அதன் பின்பு, 6 மணியளவில் பச்சைப் பட்டுடுத்தி கள்ளழகர் வைகையில் இறங்கினார். இந்த அரிய காட்சியைப் பார்க்க அங்குத் திரண்டிருந்த மக்கள் உற்சாகத்துடன் அவர் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, பூக்களைத் தூவி பரவசமடைந்தனர்.
தற்போது கோடை மழை பெய்து வைகை ஆற்றில் இந்த ஆண்டு வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வைகை ஆற்றில் வீர ராகவப்பெருமாள் மண்டகப்படி, இந்து சமய அறநிலையத்துறை மண்டகப்படியில் குழுமியிருந்த பக்தர்கள் வெள்ளத்திற்கு நடுவே தங்கக் குதிரை மீதேறி பச்சை பட்டு உடுத்தி வந்த கள்ளழகர் வைகையில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளியதும் பக்தர்கள் பெரும் ஆனந்தமடைந்தனர். கள்ளழகர் பச்சை பட்டுடன் எழுந்தருளியதால் இந்த ஆண்டு மக்களின் வாழ்கை பசுமையாகவும், மழையும் வசந்தமுமாய் வளமையாக அமையும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் நிலவுகிறதுஇந்தநிலையில் இன்று மதியம் ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் எழுந்தருளுகிறார். நாளை ஏப் 17ல்காலை 11மணிக்கு தேனுார் மண்டபத்தில் கள்ளழகர் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்கிறார். இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடக்கிறது. ஏப்18 இரவு பூப்பல்லக்கில் அழகர்கோவில் புறப்படுகிறார்.ஏப்20 மதியம் 12 மணி முதல் 1.30 மணிக்குள் கோயில் திரும்பும் அழகரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரவேற்பு கொடுக்கின்றனர்.









