தருமபுரம் ஆதீன நிகழ்ச்சிக்குச் சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தியதை தமிழக அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டதாக கூறி சட்டசபையில் இருந்து அதிமுக பாஜக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சென்றிருந்த போது அங்கு ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், போராட்டக்காரர்கள் கருப்புக் கொடியை சாலையில் எரிந்தும், வாகனங்கள் மீது கல் வீசியும் எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆளுநர் வாகனம் மீது கல் வீசி நடத்திய தாக்குதலுக்கு எதிராக பல்வேறு கட்சி தலைவர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பேசினார்.
இதற்கிடையே, ஆளுநர் விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து அதிமுகவினர் சட்டசபையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்தனர்.பாஜக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்வதாக கூறினர்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது,
நேற்று தமிழக கவர்னர் மயிலாடுதுறையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு காரில் சென்றுக் கொண்டிருந்தபோது, அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது அவரது பாதுகாப்புக்கு சென்ற வாகனங்கள் மீது கற்களை வீசியும், கருப்பு கொடிகளை வீசியும் தாக்கியுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கவர்னருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டியவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அவர்களை போலீஸ் அப்புறப்படுத்தாதது ஏன்? இது தமிழக காவல்துறை மேல் விழுந்த கரும்புள்ளி ஆகும். நான் முதல்வராக இருந்தபோது கவர்னருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியபோதும் சட்டம் ஒழுங்கு முழுமையாக காக்கப்பட்டது. ஆனால், தற்போது கவர்னருக்கே பாதுகாப்பு இல்லாதபோது சாமானிய மக்களின் நிலை குறித்து கேள்வி எழுகிறது. தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக போற்றப்பட்ட நிலையில், இன்று அரசின் கைப்பாவையாக இருக்கிறது என்றார்.
இந்த நிலையில் மயிலாடுதுறையில், கவர்னர் கான்வாய் மீது கொடி வீசப்படவில்லை என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுக.,வின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது,
கவர்னர் கான்வாய் மீது கறுப்பு கொடி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி விரிவாக விளக்கம் அளித்துள்ளார். கவர்னரின் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்களில் கற்கறோ, கொடிகளோ விழுந்து பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டது என கவர்னரின் பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார். ஆனால், இந்த விவகாரத்தை திட்டமிட்டு அரசியலுக்கு பயன்படுத்த வேண்டும் என திட்டமிட்டுள்ளனர். அதிமுகவில் இருவரும் ஒன்றாக அறிக்கை கொடுப்பது வழக்கம். ஆனால், இந்த விவகாரத்தில் திட்டமிட்டு தனித்தனியாக அறிக்கை கொடுத்துள்ளனர்.
மயிலாடுதுறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கவர்னரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கான்வாய் மீது கற்கள் வீசப்பட்டன. கொடிகள் வீசப்பட்டன என்பது அபாண்டமான குற்றச்சாட்டு. போலீசார் தடுப்புகள் அமைத்து, போராட்டக்காரர்களை கட்டுக்குள் வைத்திருந்தனர் என்பது தான் உண்மை. கவர்னர் பாதுகாப்பில் அரசு முறையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதில் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம் என்பதை உறுதியாக தெரிவித்து கொள்கிறேன். இந்த விவகாரத்தை பயன்படுத்தி, கவர்னர் மூலம் அரசியல் செய்யலாம் என பழனிசாமி நினைக்கிறார். இது நடக்கவே நடக்காது.
சட்டம் ஒழுங்கு பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. அதிமுக ஆட்சியில் சென்னா ரெட்டிக்கு என்ன நடந்தது. கவர்னர் சென்னா ரெட்டி மற்றும் அவரது கான்வாய் ஆபத்தான நிலையில் 15 நிமிடங்கள் சாலையில் நின்றது . அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் 4 பேர் கட்டைகள், கற்களை வீசி தாக்கினர். கவர்னர் உயிர் தப்பினார் என பத்திரிகைகளில் தலைப்பு செய்தி வெளியானது. முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன், அவர் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து வெளியே வர முடியவில்லை. இது தான் அ.தி.மு.க., ஆட்சியின் சாதனை. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சுப்பிரமணியன்சாமி அசிங்கபடுத்தப்பது எந்த ஆட்சியில்? பெண் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீசப்பட்டது எந்த ஆட்சியில்?
போராட்டத்தின் போது, தூசு விளாதவாறு கவர்னர் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டுள்ளார். போராட்டக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்களது ஆட்சியில் கல், முட்டை, தக்காளி, வீசியதை நினைவில் வைத்து நடக்காத ஒன்றை நடந்ததாக கூறி அரசியல் செய்ய வேண்டாம் என கேட்டு கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.







