விருதுநகர் அருகே இன்று சாலை விபத்தில் மூவர் உயிரிழந்தனர் ஒருவர் காயமடைந்த நிலையில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர்-கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் மீனாட்சிபுரம் சந்திப்பில் சாத்தூர் சுங்கச்சாவடி பணியாளர்கள் சாலையோரத்தில் தடுப்புகள் அமைத்து சாலையோரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.திங்கள்கிழமை சாத்தூரிலிருந்து-கோவில்பட்டி நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் பணியாற்றிய சாலை பணியாளர்கள் மீது மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.இதில் கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்களத்தை சேர்ந்த கார் ஒட்டுனரான,ஒய்வு பெற்ற இராணுவ வீரர் குருசாமி(55),சாலையோரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த சுங்கச்சாவடி பணியாளர்கள் திருவிருந்தான்பட்டியை சேர்ந்த செல்வபாண்டி(33)மற்றும் வாழவந்தாள்புரத்தைச் சேர்ந்த கருப்பசாமி(32),சிவந்திபட்டியை சேர்ந்த ராம்குமார்(32) ஆகிய நான்கு பேரும் பலத்த காயமைடந்தனர்.இதில் சம்பவ இடத்திலே கருப்பசாமி,செல்வபாண்டி ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தாலுகா போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு செல்வபாண்டி சாத்தூர் அரசு மருத்துவமனையிலும் கருப்பசாமி கோவில்பட்டி அரசு மருத்துவமனையிலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் காயமடைந்த ராம்குமார்,குருசாமி ஆகிய இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இதில் ராம்குமார் மட்டும் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி ராம்குமாரும் உயிரிழந்தார்.இதில் குருசாமி மட்டும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துகான காணரம் குறித்து விசாரணை நடத்தியதில் குருசாமி மதுபோதையில் காரை ஒட்டி சென்றதாக கூறப்படுகிறது.மேலும் இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




