தஞ்சாவூர் அருகே தேர்த் திருவிழாவில் விபத்து-திமுக,அதிமுக நிவாரண உதவி..

Published:

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் தேர்த் திருவிழாவில் மின் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தோர் காயமடைந்தோருக்கு திமுக,அதிமுக நிவாரண உதவித்தொகை அறிவித்துள்ளது.

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின் விபத்து ஏற்பட்டதால், 11 பேர் பலியான நிலையில், 14 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இம்மின் விபத்தில் இறந்த 11 குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் வீதமும்,காயமடைந்த 14 பேர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 25 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

தஞ்சாவூர் அருகே நடந்த தேர்விபத்து குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது,

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

இச்சம்பவத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். இத்தனை பெரிய துயரத்தை சந்தித்திருக்கும் களிமேடு கிராம மக்களுக்குத் தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் தமிழ்நாடு அரசு விரைந்தும், முழுமையாகவும் வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

இந்த விபத்தில் தங்கள் இன்னுயிரை இழந்துள்ள 11 பேர்களின் குடும்பங்களுக்கு அ.தி.மு.க. சார்பில் தலா 1 லட்சம் ரூபாயும், அதே போல், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 15 பேர்களுக்கு தலா 25,000 ரூபாயும் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

tanj - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img