கேரளாவில் குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சலால் 85 குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
கேரளாவில் மீண்டும் பீதியை கிளப்பும் புதிய வைரஸ் பரவலால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.
கேரளாவில் கடந்த சில நாட்களாக புது வகையான வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது பொதுமக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் கொல்லத்தில் புதுவகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக காய்ச்சல், உடல் வலி, கை, கால்கள் வெள்ளை நிறமாக மாறுதல் உள்பட பல அறிகுறிகளுடன் 5 வயதுக்கு உட்பட்ட ஏராளமான குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதை தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் ‘தக்காளி காய்ச்சல்’ எனப்படும் புதிய வகை வைரஸ் பரவி வருவது தெரியவந்தது.
கொல்லம் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இதுவரை 85 குழந்தைகள் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள குழந்தைகளையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கேரள சுகாதார துறை பொதுமக்களிடம் புதிய வைரஸ் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இதன் பாதிப்பு அதிகமாக இருப்பதால் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர். பொதுமக்களிடையே இந்த தக்காளி காய்ச்சல் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் பரவி வரும் தக்காளி வைரஸ் தொடர்பாக தமிழக மக்கள் அச்சம் அடைய வேண்டாம் என சுகாதாரதுறை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று கூறியுள்ளார்.
தக்காளிக்கும் தக்காளி வைரஸுக்கும் தொடர்பு இல்லை.இந்த புதுவகை வைரஸை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.





