எல்.ஐ.சி.யில் பங்குகள் வாங்க விண்ணப்பித்தவர்களுக்கு இன்று பங்கு ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எல்.ஐ.சி.யின் ரூ.21,000 கோடி மதிப்பிலான 3.5 விழுக்காடு பங்குகளை விற்க மே-4 முதல் 9 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 16,20,78,067 பங்குகளை வாங்க 47,83,67,010 விண்ணப்பங்கள் வந்துள்ளன. பொதுப்பங்கு வெளியீட்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 3 மடங்கு அதிகமாக ரூ.43,933 கோடி மதிப்பிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
எல்.ஐ.சி. ஊழியர்கள் தரப்பில் இருந்தும் ஒதுக்கப்பட்ட அளவை விட 4.4 மடங்கு கூடுதலாக விண்ணப்பங்கள் குவிந்தன.
பங்குகள் கிடைக்காத நபர்களுக்கு அவர்கள் செலுத்திய தொகை வங்கி கணக்கில் திருப்பி செலுத்தப்படும். மும்பை பங்குசந்தையில் இணையதளப் பக்கத்தில் பங்கு ஒதுக்கீடு விவரங்களை தெரிந்துகொள்ளலாம். மே 17-ம் தேதி மும்பை மற்றும் தேசிய பங்குசந்தையில் எல்.ஐ.சி. முறைப்படி பட்டியலிடப்படுகிறது.




