முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
இக்கோயிலில், 137 அடி உயரத்தில் ராஜகோபுரம் உள்ளது. இது 9 நிலைகளை கொண்டது. ராஜகோபுரத்தின் மீது 9 கலசங்கள் உள்ளன.
இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 9 மணியளவில் ராஜகோபுரத்தின் கலசத்தின் அருகே மனிதர் ஒருவர் ஏறி அமர்ந்திருப்பதை, கோபுரத்தை தரிசனம் செய்த பக்தர்கள் சிலர் பார்த்துள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் திருக்கோயில் பணியாளர்களிடம் கூறினர். இதுகுறித்து உடனடியாக போலீஸாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு மீட்பு படையினர், ரோப் கயிறு மற்றும் தார்பாய்களுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ராஜகோபுரத்தின் உட்பகுதி படிகள் வழியாக தீயணைப்பு துறையினர் ராஜகோபுரத்தின் மேல் பகுதிக்குச் சென்றனர்.
அங்கு, கலசத்தின் அருகே அமர்ந்து இருந்த நபரிடம் நைசாகப் பேசி பத்திரமாக மீட்டு கீழே இறங்கினர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர், சிவகங்கை மாவட்டம் கச்சாத்தநல்லூரைச் சேர்ந்த முத்து என்பது தெரிய வந்தது.
‘நான் பட்டப்படிப்பை பாதியில நிறுத்திட்டேன். இப்போ சிற்ப வேலைகளுக்குச் போறேன். திருச்செந்தூர் கோயில் ராஜகோபுத்தின் சிற்பங்கள், கலசங்கள் பெயிண்ட் அடிக்காம, பாலீஷ் செய்யாம இருந்துச்சு.
பாலிஷ் செய்வதற்காக கோபுரத்தில் உள்ள சிற்பங்களைப் பிடித்து ஒன்றன் மீது ஒன்றாக ஏறி கோபுரத்தின் மேலே ஏறிப் போனேன்’ எனக் கூறினார்.
அவரது பேச்சினால் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்றனர் போலீஸார். பொதுவாக சிற்ப வேலை பார்ப்பவர்களே கோபுரத்தில் பாதுகாப்பிற்காக கயிறு கட்டித்தான் ஏறுவார்கள்.
இந்த நிலையில், கயிறு ஏதும் கட்டாமல், இரவு நேரத்தில் 137 அடி உயரமுள்ள கோபுரத்தில் ஏறியது பக்தர்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியது.