தென்காசியில் பிரசித்தி பெற்றதும் பழமைவாய்ந்ததுமான காசி விஸ்வநாதர் கோவில் சிலைகள் சிதலமடைந்து வருவதால் விரைவில் கும்பாபிஷேகம் நடத்திட பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாண்டிய நாட்டின் தலை நகரங்களில் ஒன்றாக விளங்கியது தென்காசி. பதினைந்தாம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்ட பழமையும் பெருமையும் வாய்ந்தது காசிவிஸ்வநாதர் திருக்கோயில்.
இங்குள்ள மூலவர் காசிவிஸ்வநாதர், உலகம்மன், முருகன் தனித்தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டு இருக்கின்றனர்.
தென்காசி நகரில் ஓடிக்கொண்டிருந்த சித்ரா நதி இந்த கோவில் கட்டும் போது திசைதிருப்பி விடப்பட்டதாக கூறுகிறார்கள். கோவிலைச் சுற்றியே இந்த தென்காசி நகரம் நிர்மாணிக்கப்பட்டது.
கி.பி.17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கோவில் கோபுரத்தில் விழுந்த இடி மின்னலால் சேதமடைந்து இருகூறாய் பொலிவிழுந்து நின்ற கோபுரத்தை 1963ம் ஆண்டு இராஜகோபுர திருப்பணிக்குழு ஆரம்பிக்கப்பட்டு சிவந்தி ஆதித்தனர் அதில் முக்கிய பங்குவகித்து 1990ம் ஆண்டில் 180 அடி உயத்தில் 9 நிலை அடுக்கள் கொண்ட மிக பெரிய ராஜகோபுரம் கட்டப்பட்டு மகாகும்பாபிஷே விழாவும் நடைபெற்றது. அதன் பின்பு பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
கும்பாபிஷேகம் கடைசியாக 2006ம் ஆண்டு நடைபெற்று அதன் பின்னர் தற்போது 16 வருடங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது வரை கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை என்பதால் கோவிலில் உள்ள சுவாமி சிலைகள் சிதலமடைந்து வருவதால் இப்பகுதி மக்களும் பக்தர்களும் மனவேதனை அடைந்துள்ளனர்.
எனவே பிரசித்திபெற்ற இந்த தலத்தை விரைவில் சீரமைத்து மகா கும்பாபிஷேகம் நடத்திட பக்தர்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.