சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று வந்துள்ளது.
அதில் வந்த பயணிகளையும், உடமைகளையும் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
அப்போது சென்னையை சேர்ந்த ஒரு இளைஞரின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்துள்ளனர்.
அவரிடம் அட்டைப்பெட்டி மற்றும் துணியால் செய்யப்பட்ட கூடை ஒன்று இருந்துள்ளது. இதை பார்த்த அதிகாரிகள் அதை திறந்து பார்த்துள்ளனர்.
அதை சோதனை செய்ததில் வெள்ளைநிற முள்ளம்பன்றி மற்றும் டமரின் மங்கி என்று கூறப்படும் அரியவகை வெளிநாட்டு விலங்குகளை வைத்திருந்தார். இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
வெளிநாட்டில் இருந்து வளர்ப்பதற்காக வாங்கி வந்ததாக கூறியுள்ளார். ஆனால் அவரிடம் அதற்கான முறையான ஆவணங்கள் இல்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து வனவிலங்கு போன்ற உயிரினங்களை விமானம் மூலம் இந்தியாவிற்கு கொண்டுவர வேண்டும் என்றால் இரு நாட்டு அனுமதியும் பெற்றிருக்க வேண்டும் எனக்கூறிய அதிகாரிகள், இளைஞரிடம் அதற்கான ஆவணங்கள் உள்ளதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் இந்த விலங்குகளை இந்தியா கொண்டுவரும்போது முறையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதற்கான சான்றிதளும் இல்லை எனக்கூறப்படும் நிலையில் அந்த விலங்குகளை அதிகாரிகள் தாய்லாந்திற்கே அனுப்பி வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து அந்த விலங்குகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து மத்திய வன விலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவுக்கு தகவல் கொடுத்தனர். விலங்குகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்ட பின் 2விலங்குகளையும் மீண்டும் தாய்லாந்துக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த விலங்குகளை கொண்டு வந்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.