ராமேஸ்வரம் மீனவப் பெண்ணை கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் இறங்கியதால் ராமேஸ்வரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் மற்றும் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.
ராமேஸ்வரம் அருகே உள்ள வடகாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த 45 வயது பெண் நேற்று முன்தினம் கடல்பாசியை சேகரிக்க சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் இறால் பண்ணையில் வேலை பார்க்கும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஆறு வடமாநிலத்தவர்கள் சந்திராவை கேலி செய்தாக கூறப்படுகிறது. அத்துடன் இறால் பண்ணை அருகே அடர்ந்த காட்டுப் பகுதியில் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. அத்துடன் கொலையை மறைக்கும் நோக்கில் உடலை தீவைத்து எரிந்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து சந்தேகத்தின் அடிப்படையில் 6 வடமாநிலத்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். தொடர் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கொலை செய்த உண்மையான குற்றவாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் மீனவர்கள் இன்று ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அங்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


