மாலை மாற்றும் போது நடந்த சம்பவம்.. திருமணத்தை நிறுத்திய மணமகள்!

Published:

marriage 9 - 2026

கர்நாடகத்தில் திருமணத்துக்கு முன்பாக மாலை மாற்றும்போது மணமகன் கை கழுத்தில் பட்டதால் கோபமடைந்த மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீப காலமாக தாலிகட்டும் வேளையில் திருமணங்கள் நின்றுபோவதும் ஆங்காங்கே நடந்து வருகிறது. உணவு சரியில்லை, மணமகன், மணமகளின் ஆடை அலங்காரம் சரியில்லை உள்ளிட்டவற்றை காரணம் காட்டி கூட திருமணங்கள் தடைப்பட்டுள்ளன. இந்த வரிசையில் தான் தற்போது கர்நாடகத்தில் ஒரு திருமணம் பாதியில் நின்றது.

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா மூடுகோனஜேவை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், நாராவி பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

இவர்களின் திருமணம் மே 25ல் நாராவியில் உள்ள மண்டபத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து இருவீட்டாரும் திருமண வேலைகளை செய்து வந்தனர். திருமண அழைப்பிதழ்கள் அச்சடித்து உறவினர்களுக்கு வழங்கப்பட்டது.

மே 25ல் திருமண மண்டபத்துக்கு மணமகன், மணமகள் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் வந்திருந்தனர். சம்பிரதாய முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டன.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

மணமக்கள் மாலை மாற்றி கொள்ள கூறினர். மணமகன் தனது கழுத்தில் இருந்த மாலையை எடுத்து மணமகள் கழுத்தில் போட்டார். அப்போது மணமகனின் கை, மணமகளின் கழுத்தில் பட்டதாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த மணமகள் தனது கையில் வைத்திருந்த மாலையை தூக்கி வீசியதுடன் மணமேடையை விட்டு வேகமாக வெளியேறினார்.

பிறகு தனக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை. திருமணத்தை நிறுத்தும்படி கூறினார். இதனால் மணமகன் தரப்பு அதிர்ச்சியடைந்தது. அந்த பெண்ணிடம் அவரது குடும்பத்தினர் பேசியும் அவர் மனம்மாறவில்லை.

இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திருமண செலவை திரும்ப வழங்கும்படி மணமகன் தரப்பில் கேட்கப்பட்டது. இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

இதனால் வாக்குவாதம் முற்றியது. இதுபற்றி தகவலறிந்தவுடன் வேனூர் போலீசார் வந்தனர். அப்போது மணமகள் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என கூற, மணமகனும் தனக்கு இந்த பெண்ணுடன் திருமணம் வேண்டாம் என்று தெரிவித்தார். இதனால் திருமணம் நின்றது.

இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இருவீட்டாருக்கும் இடையேயான பிரச்சனையை தீர்த்து வைத்து அனுப்பினர்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

இதற்கிடையே திருமணத்துக்காக சுமார் 500 பேருக்கு உணவு தயார் செய்யப்பட்டு இருந்தது. இந்த உணவு அருகே உள்ள பள்ளிக்கூட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

Related articles

Recent articles

spot_img