புகார் அளிக்க வந்த மக்களை அடிக்க முயன்ற அமைச்சரின் செயலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பாங்குழி ஊராட்சியில் உள்ள வடந்தாங்கல் ஏரி புனரமைப்பு செய்யும் பணியை துவக்க அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் த.மோ அன்பரசன் கலந்து கொண்டு, புனரமைப்பு பணிகளை அடிக்கல் நாட்டி பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தொடங்கி வைத்தார்.
பின்னர் ராமானுஜபுரம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் குளம் சீரமைப்பு தொடர்பாக புகார் மனு அளிக்க வந்தனர். அப்போது பொதுப்பணி துறை சார்பாக விடப்படும் ஏலம் வேண்டாமென்றும், கிராம மக்கள் சார்பாக விடப்படும் ஏலத்தை செயல்படுத்த கோரிக்கை விடுத்த போது, அமைச்சர் அன்பரசன் கையை ஓங்கி பொதுமக்களை அடிக்க முற்பட்டார்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு காண்போரை முகம் சுளிக்க வைத்தது. புகார் மனு அளிக்க வரும் பொதுமக்களிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டிய அமைச்சரே இதுபோன்று சர்ச்சைக்குரிய வகையில் ஈடுபட்டு இருப்பது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
