தென்னிந்தியளவில் பிரபலமான தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று திங்கள்கிழமை வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி என்ற அளவில் நீர்வரத்து பதிவானது. இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை அளவீட்டு நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், தமிழகத்தை நோக்கி வரும் காவிரி ஆறு அமைந்துள்ள வனப்பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று நீர்வரத்து உயர்ந்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும் அருவியிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கும் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி மறு அறிவிப்பு வரும் வரை தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.
