சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஆய்வு செய்ய ஒத்துழைப்பு தர அமைச்சர் சேகர்பாபு கோயிலில் தீட்சிதர்கள் முன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தநிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொது தீட்சிதர்கள், கணக்கு விவரங்களை இன்று அதிகாரிகளிடம் கொடுக்க மறுத்து விட்டதால் பரபரப்பு நிலவியது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள உலக புகழ் பெற்ற நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், நகைகள், வருமானம், வரவு – செலவு கணக்கு விபரங்களை, அறநிலையத் துறை அதிகாரிகள் குழு 7, 8ம் தேதிகளில் ஆய்வு செய்ய வரும் போது, சமர்ப்பிக்க வேண்டும் என, அறநிலைய துறை ‘நோட்டீஸ்’ வழங்கியது.
நடராஜர் கோவில் நிர்வாகத்தில் அரசு தலையிடக் கூடாது. ஆகம விதிப்படி கோவிலில் நடைபெறும் பூஜைகளில் தலையிடக் கூடாது. கோவில் தீட்சிதர்கள் சிறுபான்மையினர் என உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டது. இதையெல்லாம் சுட்டிக்காட்டி அறநிலையத்துறை ஆய்வுக்கு தீட்சிதர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.
அறநிலையத்துறை ஆணையர், ஜனாதிபதி, பிரதமர், தமிழக முதல்வர், கவர்னர் மற்றும் அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுக்கு பொது தீட்சிதர்கள் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
இதற்கு அறநிலையத்துறை ஆணையர் கண்ணன், நடராஜர் கோவில் பொதுக்கோவில். இங்கு ஆய்வு நடத்த அறநிலையத் துறைக்கு அதிகாரம் உள்ளது. ஏற்கனவே குறிப்பிட்ட ஜூன் 7, 8 தேதிகளில் நடராஜர் கோவிலில் ஆய்வுக்கு வரும் அறநிலையத்துறை குழுவினருக்கு தீட்சிதர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். குழுவினர் கேட்கும் விபரங்களை தர வேண்டும் என பதில் நோட்டீஸ் அனுப்பினார்.
அதன் பின்பு மீண்டும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சத்தை சுட்டிக்காட்டி 15 பக்கத்தில் மீண்டும் ஒரு கடுமையான அறிக்கையை கோவில் தீட்சிதர்கள் அறநிலையத்துறைக்கு அனுப்பினர். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், திட்டமிட்டபடி வருவாய்த்துறை அலுவலர் சுகுமார் தலைமையிலான அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய இன்று கோயில் வந்தனர். அப்போது கோவிலுக்கு சொந்தமான சொத்து அவற்றில் இருந்து பெறப்படும் வருமானம் சொத்துகளின் தற்போதைய நிலை சொத்து பதிவேடு உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கேட்டனர்.
இதற்கு பொது தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கோவில் ஆவணங்களை அளிக்க மறுத்து விட்டனர்.இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்க்கு தீட்சிதர்கள் தரப்பில் கூறப்பட்ட காரணங்கள், சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு நடத்த சட்டரீதியாக அணுகவில்லை. கோயிலில் 2009-ல் நடந்த கணக்கு தணிக்கைக்கே இன்னும் அறிக்கை தரவில்லை என தீட்சிதர்கள் தரப்பு கூறியுள்ளது.
மேலும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தான் நடராஜர் கோயில் கணக்குகளை பராமரிப்பதாக தீட்சிதர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் என்ன மாதிரியான புகார் கூறினார்கள் என தெளிவாக அறநிலையத்துறை கூறவில்லை எனவும் கூறியுள்ளனர். கோயில் நிர்வாக வரவு-செலவு, சொத்து, நகைகள் பற்றி அறநிலையகுழு 2 நாள் ஆய்வு நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது, சிதம்பரம் நடராஜர் கோயிலில் முறைகேடு நடந்துள்ளதை உறுதி செய்வதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






