உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெளவில் 16 வயது சிறுவன் தனது தாயை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த லக்னெள காவல் துறையினர், பப்ஜி விளையாடியதைக் கண்டித்ததால், ஆத்திரமடைந்த மகன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற உண்மையைக் கண்டறிந்துள்ளனர்.
இது தொடர்பாக பேசிய துணை ஆணையர் குவாசிம் அபிதி, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்தனர். ரத்த வெள்ளத்தில் இருந்த இடங்களில் தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். இது தொடர்பான முதல் கட்ட விசாரணை முடிவடைந்துள்ளது. இதில் 16 வயது மகன் தனது தாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது தெரியவந்துள்ளது. பப்ஜி விளையாடியதை தாய் கண்டித்ததால், ஆத்திரமடைந்த சிறுவன் வீட்டில் தந்தை வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டுக்கொன்றுள்ளார். வீட்டிற்கு மின்சாரம் பழுதுபார்க்க வந்தவர்கள் தாயைக் கொன்றதாக ஆரம்பகட்ட விசாரணையில் மகன் நாடகமாடினார். ஆனால் தொடர் விசாரணையின் மூலம் உண்மை தெரியவந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.





