அரசு பஸ்சில் மனைவிக்கு இலவசம், கணவருக்கு 4 மடங்கு அதிக கட்டணம் இதுதான் திராவிட மாடல் ஆட்சி என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியில் தெரிவித்தார்.
காரைக்குடியில் அவர் கூறியதாவது, தி.மு.க., அரசின் ஓராண்டு சாதனை குறித்து மக்கள் தான் பெருமையாக சொல்ல வேண்டும். மக்கள் பணத்தில் கூட்டம் போட்டு தி.மு.க.,வினரே கூறக்கூடாது.
அரசு பஸ்சில் மனைவிக்கு இலவசம், கணவருக்கு 4 மடங்கு அதிக கட்டணம். பஸ்சில் இலவச கட்டணத்தை யாரும் கேட்கவில்லை. பஸ்கள் அனைத்தும் ஓட்டை உடைசலாக உள்ளது.
டில்லி மற்றும் கேரளா அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் ஏன் உயருவதில்லை. இலவசங்கள் என்ற பெயரில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களை கையேந்த விடமாட்டோம்.
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தி.மு.க.,வினர் ஊழல் பற்றி பேசுகிறார். அதே நேரம் அ.தி.மு.க.,வின் ஊழல் பற்றியும் பேச வேண்டும். நாம் தமிழர் கட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும். அந்த முடிவை பா.ஜ.க எடுக்குமா? ஒரு கால கட்டத்தில் மக்கள் எங்களை தேடுவார்கள், என்றார் சீமான்.





