கூகுள் நிறுவனம் அவதூறாக பதிவு வெளியிட்டதற்காக கூகுள் நிறுவனத்திற்கு மெக்சிகோ நீதிமன்றம் ஆயிரத்து 910 கோடி ரூபய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது உலகில் பெரும் பரபரப்பான தீர்ப்பாகியுள்ளது.
மெக்சிகோவை சேர்ந்த வழக்கறிஞரும், எழுத்தாளருமான ரிச்டர் மொராலஸ் என்பவர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக கூகுள் நிறுவனம் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது.
கடந்த 2014-ம் ஆண்டு இந்த பதிவு வெளியிடப்பட்ட நிலையில், இது தன் பெயருக்கு களங்கம் விளைப்பதாக மொராலஸ் தெரிவித்திருந்தார். மேலும் இந்த பதிவை நீக்குமாறு கூகுள் நிறுவனத்திற்கு அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது கோரிக்கையை நிராகரித்த கூகுள் நிறுவனம் அந்த பதிவை நீக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் இது தொடர்பாக 2015-ம் ஆண்டு மெக்சிகோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரிச்டர் மொராலஸ் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய கூகுள் நிறுவனம் ரூ.1,910 கோடி அவருக்கு அபராதம் செலுத்த வேண்டும் என தீர்ப்பளித்தது.
இதற்கு பதிலளித்த கூகுள் நிறுவனம், தாங்கள் வெளியிட்ட பதிவு கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளை குறித்து மதிப்பிடும் என கூறியது. மேலும் இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் எனவும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இதுபோன்ற வழக்கில் ஆஸ்திரேலிய நீதிமன்றம் கூகுள் நிறுவனத்துக்கு ரூ.3.80 கோடி அபாரதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.





