சொகுசு கார் இறக்குமதி தொடர்பாக நடிகர் விஜய் தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று முடித்து வைத்துள்ளது .
நுழைவு வரி செலுத்தவில்லை என அபராதம் விதித்ததை எதிர்த்த நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. கடந்த 2005ம் ஆண்டு நடிகர் விஜய் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 கார் ரூபாய் 63 லட்சம் மதிப்புடையது. இந்த காருக்கு நுழைவு வரி செலுத்த வணிகவரித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது .அந்த வழக்கில் நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என 2019ம் ஆண்டு ஜனவரியில் உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது. விஜய் தரப்பில் ரூபாய் 7,98,75 ரூபாய் நுழைவு வரி செலுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து வரி செலுத்தப்படாத இடப்பட்ட காலத்திற்கான அபராதமாக 30,23,650 ரூபாய் செலுத்த வேண்டும் என கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் வணிகவரித்துறை விஜய்க்கு மீண்டும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், கார் இறக்குமதி செய்யப்பட்டதிலிருந்து மாதத்திற்கு இரண்டு சதவீதம் என கணக்கிட்டு மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டும் .ஆனால் தமக்கு 400 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று விஜய் தரப்பில் கூறப்பட்டது.
இதனிடையே நுழைவு வரியை செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு குறித்த காலத்திற்குள் நுழைவு வரி செலுத்தாததால் 2005ம் டிசம்பர் முதல் 2021 செப்டம்பர் வரையிலான 189 மாதங்களுக்கு நுழைவு வரியில் இரண்டு சதவீதம் அபராதம் வட்டியாக 30 லட்சத்து 23 ஆயிரத்து 650 ரூபாய் செலுத்தும் படி உத்தரவிட்டதாகவும் வணிகவரித்துறை தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.இந்நிலையில் நடிகர் விஜய் மற்றும் வணிகவரித்துறையின் மனுக்களையும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. அதில் , நடிகர் விஜய் இறக்குமதி செய்த காருக்கு 2019ம் ஆண்டு ஜனவரிக்கு முன் முழு நுழைவு வரி செலுத்தி இருந்தால் அபராதம் விதிக்கக்கூடாது என்று வணிகவரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2019 ஜனவரிக்கு பின்னும் வரியை முழுமையாக செலுத்தாமல் இருந்தால் மட்டுமே அபராதம் விதிக்கலாம் என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், நுழைவு வரி செலுத்தவில்லை என அபராதம் விதித்ததை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. நுழைவு வரியை ரத்து செய்யக்கோரி இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில், இறக்குமதி கார்களுக்கு நுழைவு வரி செலுத்துவது கட்டாயம் என்று கூறி வழக்குகளை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.





