கள்ளக்குறிச்சி அருகே பள்ளி கலவரத்தில் பள்ளியில் மாணவர்களின் சான்றிதழ்கள் எரிந்துள்ளன.மாணவர்களுக்கு தேவையான அனைத்து மாற்றுச்சான்றுகளும் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி இன்று நிருபர்களிடம் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி நேற்று பள்ளியை ஆய்வு செய்தோம். நீதிமன்ற வழக்கு காரணமாக பெற்றோரை நேரில் சந்திக்க முடியவில்லை. மறைந்த மாணவியின் தாய் எம்.காம் படித்துள்ளார். அவர் கேட்டுள்ளபடி அவருக்கு பணி வழங்குவது குறித்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். பள்ளியில் மாணவர்களின் சான்றிதழ்கள் எரிந்துள்ளன. அதனை கண்ணீர் மல்க பலர் எங்களிடம் கூறினர். மாணவர்களுக்கு உதவ அருகில் உள்ள தனியார் பள்ளிகள் தயாராக இருக்கின்றன.
இன்று முதல்-அமைச்சரு டன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பள்ளியில் நடந்தது என்ன? அதற்கான தீர்வு, மாணவர்கள், பெற்றோர்கள் மனநிலை என்ன? என்பது குறித்து கூற உள்ளோம். இந்த கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டது. கோபத்தில் ஏற்படவில்லை என நீதி மன்றம் கூறி உள்ளது. மாற்று சான்றிதழ் மட்டு மின்றி பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட மாணவர்களின் பல சான்றிதழ்கள் எரிந்து உள்ளன. வருவாய் துறை மூலம் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்வோம். மாணவர்களுக்கு தற்காலிக மாற்று சான்றிதழ் எளிதில் வழங்க முடியும். மாணவர்களின் கற்றல் பாதிக்காத வகையில் முதல்-அமைச்சருக்கு அறிக்கை வழங்க உள்ளோம். அந்த பள்ளியின் அருகே 5 அரசு பள்ளி, 17 தனியார் பள்ளிகள், 2 கல்லூரிகள் உள்ளன. பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு இந்த கல்வி நிறுவனங்களை பயன்படுத்த முடியுமா? என முதல்-அமைச்சரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுப்போம்.
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் சான்றிதழ் சரி பார்ப்பின் போதே போலி நபர்கள், வெளி மாநிலத்தவர்களை கண்டறிந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளுக்கும் கட்டாய தமிழ்த்தாள் நடைமுறையை கொண்டு வருவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.





