

இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அருகே மாமல்லபுரத்தில் இன்று தொடங்கி ஆகஸ்ட் 10ந் தேதி வரை நடைபெறவுள்ளது. ஆசியாவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் இந்த போட்டி நடைபெறுகிறது. இதில் 187 நாடுகள் பங்கேற்கின்றன. 30 வீரர்களைக் கொண்டு 6 அணிகளாக இந்த போட்டியில் இந்தியா களமிறக்குகிறது.
இந்தியாவிலேயே சென்னையில்தான் 26 கிராண்ட்மாஸ்டர்கள் உள்ளனர். செஸ் போட்டிகளில் இந்தியாவில் தமிழகம் சிறந்து விளங்குவதன் காரணமாக சென்னையில் இந்தப் போட்டிகள் நடத்தப்படுவதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பான ஃபிடே அறிவித்துள்ளது. இந்நிலையில் இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வரும் பிரதமர் மோடி, நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள விழாவில் கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைக்கிறார். தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் சிங் தாக்கூர், மத்திய தகவல் ஒலிபரப்பு இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோர் தொடக்க விழாவில் கலந்து கொள்கின்றனர்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்காக சென்னை வருவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் என்று தமது சென்னை வருகை தருவது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார். இந்த சிறப்பான போட்டி இந்தியாவில், அதுவும் செஸ் விளையாட்டுடன் பெருமைமிகு தொடர்பைக் கொண்டுள்ள தமிழ்நாட்டில் நடைபெறுவது நமக்கு மிகப்பெரிய பெருமை ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இன்று இரவு ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி தங்குகிறார். நாளை சென்னை அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறார். இந்த விழாவில் 69 பேருக்கு தங்கப் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் அவர் வழங்குகிறார்.
சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சிற்பக்கலைத் தூணை திறந்து வைத்த முதல்வர்…

மாமல்லபுரத்தில் கைவினை கலையில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்களின் நலனுக்காக “கைவினை சுற்றுலா கிராமம்” என்ற திட்டம் மாநில மற்றும் ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாமல்லபுரத்தின் நுழைவு வாயிலில் 45 அடி உயரத்தில் அழகிய “சிற்பக்கலைத் தூண்” அமைக்கப்பட்டுள்ளது. கலைநயமிக்க பல்லவர் கால சிம்மம், யாழி, தோகை விரித்தாடும் மயில்கள், யானைக்கூட்டம், ஆகியவைகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டு மாமல்லபுரத்திற்கு வருகைப் புரியும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இந்த தூண் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாமல்லபுரத்தில் 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் சர்வதேச சதுரங்கப் போட்டியில் பங்குபெறும் சதுரங்க வீரர்களையும், போட்டியினை காண வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளையும், பொதுமக்களையும் கவரும் வகையில் இக்கற்சிற்பக் கலைத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் சார்பில் மாமல்லபுரத்தின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிற்பக்கலைத் தூணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.