
கேரளாவில் கனமழை பெய்து வருவதால் சபரிமலை வரும் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் பம்பா நதியில் நீராட அனுமதிக்கப்படவில்லை என பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத் தலைவர் டாக்டர். திவ்யா எஸ் ஐயர் தெரிவித்தார்.
சபரிமலையில் ஆகஸ்ட் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்படுவதை முன்னிட்டு சபரிமலை நிறைபுத்தரி உற்சவ ஏற்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
சீரற்ற காலநிலை காரணமாக மலைப்பாங்கான பகுதிக்கு இரவு பயணம் மேற்கொள்ள பேரிடர் மேலாண்மை ஆணையம் தடை விதித்துள்ள நிலையில் சபரிமலை நிறைபுத்தரி திருவிழா நடைபெற்று வருகிறது. எனவே பக்தர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். மேலும், நதிகளில் இறங்குவதற்கு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு அமலில் உள்ளது. எனவே பக்தர்கள் பம்பா நீராட அனுமதிக்கப்பட மாட்டார்கள். சுவாமி ஐயப்பன் வீதி வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். நிறைபுத்தரி விழாவுக்காக சபரிமலையில் விழாக்களுக்கு இடையூறு இல்லாமல் ஆகஸ்ட் 3ஆம் தேதி நடை திறக்கப்பட்டு நாளை ஆக 4இல் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைபுத்தரிசி பூஜை வழிபாடுகள் நடைபெறும்.




