தமிழகத்தில் கோவை விருதுநகர் சிவகாசியில் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் :-

கோவை மாவட்டத்தில் உள்ள வேளாண் பல்கலைகழகத்தில் முதலாமாண்டு பயின்று வந்த மாணவர் ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பேருந்து நடத்துநராக பணியாற்றி வருபவர் பழனி. இவரது மகன் பிரோதாஸ் குமார் (19) கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் பயோடெக் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். மாணவர் பிரோதாஸ் குமார், இளங்கலை வனவியல் பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் இருந்து வந்த நிலையில், அந்த துறை கிடைக்காததால், பயோ டெக் படித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரோதாஸ் குமார் பல்கலைகழகத்தின் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுதொடர்பாக, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், விருப்பப்பட்ட துறை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த மாணவர் பிரோதாஸ் குமார் ஏற்கனவே ஒருமுறை வீட்டில் இருந்தபோது தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரை பெற்றோர்கள் சமாதானப்படுத்தி கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.மேலும், மாணவர் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா..? என்பது குறித்து, விடுதியில் உடன் தங்கியிருந்த மாணவர்கள், அவரது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகரில்:-

விருதுநகரை சேர்ந்த மருத்துவ மாணவர் தூக்க மாத்திரைகளை தின்று, தனது பிறந்த நாளில் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் விக்னேஷ் காலனியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் ( 48). இவர் ஆஸ்பத்திரியும், விருதுநகர் அக்ரஹாரம் தெருவில் மருந்து கடையும் நடத்தி வருகிறார். இவருடைய மூத்த மகன் லோகேஷ் (22). இவர் கிர்கிஸ்தான் நாட்டில் உள்ள ஜாலாலாபாத் பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். கடந்த ஜூன் மாத இறுதியில் விடுமுறைக்காக விருதுநகர் வந்தார். தற்கொலை ஆகஸ்டு 10-ந்தேதி இவரது பிறந்த நாள் ஆகும். நேற்று அவரது பிறந்த நாள் என்பதால், தனது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட வேண்டும் என்றும், அதற்கு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக நேற்று முன்தினம் கேட்டு்ள்ளார். ஆனால் லோகேஷின் தாயார் பிறந்தநாளை எளிமையாக கொண்டாடலாம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவருத்தம் அடைந்த லோகேஷ் நேற்று முன்தினம் இரவு மருந்து கடைக்கு சென்று அதிக எண்ணிக்கை கொண்ட தூக்க மாத்திரை அட்டையை எடுத்துச்சென்றுள்ளார். பின்னர் அவர்களது ஆஸ்பத்திரிக்கு சென்று தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு, தனக்கு மயக்கம் வருவதாக ஆஸ்பத்திரியில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். அப்போது அவர்கள், லோகேஷின் சட்டைப்பையில் இருந்த மாத்திரை அட்டை காலியாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் லோகேஷ் பரிதாபமாக இறந்தார். தனது மகன் இறந்ததை அறிந்த பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
இது பற்றி லோகேஷின் தந்தை ஆனந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விடுமுறையில் ஊருக்கு வந்த மருத்துவ மாணவர், அவரது பிறந்த நாளன்று உயிரை மாய்த்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
சிவகாசியில் -:

விளையாட்டு வீராங்கனை ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகாசி பள்ளப்ப ட்டியை சேர்ந்தவர் முருகேஸ்வரி. இவரது மகள் தங்கபாண்டியம்மாள் (18). கல்லூரி மாணவியான இவர் ஜூடோ விளையாட்டு வீராங்கனை ஆவார். மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று தங்கபாண்டியம்மாள் விளையாடி உள்ளார். திருப்பூரில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க பெற்றோர் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதில் விரக்தி அடைந்த தங்கபாண்டியம்மாள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி கிழக்கு போலிசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகாசி சாட்சியாபுரம் கந்தபுரம் காலனியைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மனைவி ஆரோக்கிய புஷ்பா (50). வடபட்டி நடுநிலைப்பள்ளியில் அரசு ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு இவரது தந்தை இறந்து விட்டார். இதனால் மனநலம் பாதிக்கப்பட்ட ஆரோக்கிய புஷ்பா இரவு கத்தியால் உடலில் கீறிக்கொண்டு வீட்டின் வராண்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி டவுண் போலீசார் விசாரித்து வருகின்றனர்.




