பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சதுர்த்தி விழா கொடியேற்றம்

Published:

IMG 20220822 WA0042 - 2026
                          
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா திங்கள்கிழமையன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோயில் உள்ளது. குடவரை கோயில்களில் ஒன்றானதும், வரலாற்று சிறப்புமிக்கதுமான இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதற்காக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிள்ளையார்பட்டிக்கு வருகை தருவார்கள் இந்த ஆண்டிற்கான சதுர்த்தி விழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியையொட்டி காலை 9.30 மணிக்கு மூஷிக வாகனம் பொறிக்கப்பட்டுள்ள வெண்கொடி கோயிலை வலம் வந்தது. 

உடன் வெள்ளி சிம்ம வாகனத்தில் கும்பம் வலம் வந்தது.  பின்னர் கொடிமரத்தில் வலம் வரப்பட்ட வெண்பட்டு சுற்றப்பட்டு கொடி மரத்திற்கான சிறப்பு பூஜையும், அங்குசதேவருக்கு சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டு கொடியேற்றம்.10 மணியளவில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜை ஏற்படுகளை பிச்சைக்குருக்கள், சோமேஸ்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் செய்திருந்தனர்.  இரவு 8.30 மணிக்கு கற்பக விநாயகர் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினமும் 2 ஆம் திருநாள் 8 ஆம் திருநாள் வரை காலை 9.30 மணிக்கு வெள்ளி கேடகத்தில் சாமி திருவீதி உலா நடைபெற உள்ளத, இரவு ஒவ்வொரு நாளும் சிம்மம், மூஷிகம், கருடன், மயில், ரிஷபம், கமலம், குதிரை, யானை உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும்.  27.8.22 சனிக்கிழமையன்று 6 ஆம் திருவிழாவாக மாலை 4.30 மணிக்கு கஜமுஹாசுர சம்ஹாரமும்  30.8.22 செவ்வாய்க்கிழமையன்று திருத்தேரோட்டமும் அன்றைய தினம் மாலை 4.30 முதல் இரவு 10 மணி வரை மூலவர் வருடத்திற்கு ஒருமுறை காட்சி தரும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் தரிசனம் தருவார்.  

தொடர்ந்து 10 ஆம் திருநாளான விநாயகர் சதுர்த்தியான புதன்கிழமையன்று காலை கோயில் திருக்குளத்தில் விநாயகர் சதுர்த்தி தீர்த்தாவாரி உற்சவமும் நண்பகல் முக்குருணி எனப்படும் மெகா கொழுக்கட்டைப் படைத்தலும் இரவு 11 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. விழாக் காலங்களில் ஒவ்வொரு நாளும் திருமறை பாராயணமும் திருமுறைப் பாராயணமும் நாதஸ்வர இன்னிசையும் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை  அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் பரம்பரை அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.
ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img