தூத்துக்குடி: இளைஞர்களிடையே காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ள ஆதரவைப் பார்த்தால் எங்களாலேயே நம்பமுடியவில்லை என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உற்சாகமாகக் கூறியுள்ளார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமை தாங்கிப் பேசினார். இந்தக் கூட்டத்தின் பின்னர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியாவிலேயே தொண்டர்களுக்கு மதிப்பளிக்கும் ஒரே இயக்கம் காங்கிரஸ்தான். காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளோம். அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 15 முதல் 16 லட்சம் உறுப்பினர் படிவங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே மிகப் பெரிய ஆதரவு வந்து கொண்டு இருப்பதைப் பார்த்தால், எங்களாலேயே நம்ப முடியவில்லை. அந்த அளவுக்கு இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலை பொறுத்தவரை பணம் விளையாடும் என்பது தெரியும். ஆனால் இவ்வளவு தூரம் விளையாடும் என்பதை நம்ப முடியவில்லை. உயர் நீதிமன்றம் 50 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கூறியது. ஆனால் அதை ஏற்காமல் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தியது. இந்தப் போலி வாக்காளர்கள் ஆளும் கட்சிக்கு ஓட்டு போட்டதால் வாக்கு வித்தியாசம் அதிகமாகியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்துப் போராடுவதற்கு தமிழ்நாட்டில் ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும். இல்லை என்றால் காங்கிரஸ் தனித்தாவது போராடும் என்று கூறினார். இந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், செயலாளர் சென்னாரெட்டி ஆகியோர் மாவட்ட வாரியாக நிர்வாகிகளிடம் கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.
இளைஞர்களிடையே காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ள ஆதரவைப் பார்த்தால் எங்களாலேயே நம்பமுடியவில்லை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
Popular Categories


