
ஆயுதபூஜை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு
முன்பதிவு இல்லாத சேர் கார் வசதி கொண்ட
பகல்நேர ரயில்களை சென்னை பெங்களூரூ வில் இருந்து செங்கோட்டை க்கு இயக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு பகல் நேர, முன் பதிவில்லாத சேர் கார் வசதி கொண்ட சிறப்பு ரயில்களை இயக்க வேண்டுமென பொது மக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்துக்களின் முக்கியத் திருவிழாவான தீபாவளி பண்டிகையானது இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வரும் அக்.,24 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
அன்றைய தினம், சிறியவர் முதல் பெரியவர் வரை புத்தாடைகள் அணிந்து, இனிப்புகள் பரிமாறி, பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுவது வழக்கம்.
இந்நிலையில், சென்னை உள்ளிட்ட வடமாவட்ங்களில் வசிப்போர் தென் மாவட்டங்களில் உள்ள தங்களது சொந்த ஊருக்குச் சென்று தீபாவளித் திருநாளை கொண்டாடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கொண்டாட பலரும் ஆர்வமாக உள்ளனர்.
இந்தநிலையில், தென்னகரயில்வேயில் தீபாவளிப் பண்டிகை முன் பதிவானது 120 நாட்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது. டிக்கெட்டுகள் அனைத்தும் வழக்கமான அனைத்து ரயில்களிலும் சில நிமிடங்களிலேயே தீர்ந்து போயின.
கடந்தவாரம், அரசுப் போக்குவரத்து கழக விரைவுப் பேருந்துகளிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்தும் தீர்ந்து போய் விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை, தனியார் ஆம்னிப் பேருந்து கட்டணமானது, எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு தீபாவளித் திருநாளையொட்டி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. விமானக் கட்டணத்திற்கு இணையாக இந்தக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
தமிழக அரசானது, தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்களே, கட்டணத்தை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால், பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் குறைந்த செலவில் செல்ல முடியுமா? என்ற ஏக்கத்தில் தவித்து வருகின்றனர்.
ஆகையால், தெற்கு ரயில்வே நிர்வாகமானது, முன் பதிவில்லாத சேர் கார் வசதி கொண்டு சிறப்பு ரயில்களை பகல் நேரத்தில், சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, ராமேஸ்வரம், செங்கோட்டை மார்க்கமாக தென் மாவட்டங்களுக்கு இயக்கிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது, மதுரை-நெல்லை இடையே இரட்டை ரயில் பாதையானது, பெரும் பகுதி நிறைவடைந்துள்ளதால், எளிதில் பகல் நேர ரயில்களை இயக்க முடியும். எனவே,தீபாவளிப் பண்டிகைக்கு இரு நாட்களுக்கு முன்பும், பின்னரும் பகல் நேர முன் பதிவில்லாத ரயில்களை இயக்கிட வேண்டுமென ரயில் பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




