வருகிற அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பிரதமர் மோடி கலந்துகொள்வதற்கான திட்டம் எதுவும் இல்லை என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வருகிற அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற உள்ள முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையில் கலந்து கொள்வதற்காக தமிழக பாஜகவின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக தகவல் வெளியானது. இந்நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து தலைவர்களின் குருபூஜையிலும் கலந்து கொள்ள பிரதமர் விரும்புகிறார். தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாக கருதிய முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையில் பிரதமர் மோடி கலந்து கொள்வதற்கான எந்த திட்டமும் இல்லை.
பிரதமர் அலுவலகத்திலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. பிரதமர் நிகழ்ச்சிகள் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே திட்டமிடப்படுகின்றன. எனினும் பிரதமர் மோடி கலந்து கொள்வதாக வெளியான செய்தி எங்கிருந்து வெளியானது எனத் தெரியவில்லை” என விளக்கமளித்தார்.





