
கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (வெள்ளி) விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. அது போல், புதுச்சேரியில் கனமழை காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இன்று காலை ஓரளவு வெயில் அடித்தது.
இந்த நிலையில் மாலையில் தீடீரென கனமழை கொட்டியது. சென்னை மெரினா, அடையாறு, சாந்தோம், ஜெமினி பாலம், தேனாம்பேட்டை, எழும்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி வருகிறது.
புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும், சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில், சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நாளை வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்துள்ளார்.