
கேரளா தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது. மெயின் அருவியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது
குற்றாலம் சீசன்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் சீசன் தொடங்கியது. தொடர்ந்து பெய்த சாரல் மழையினால் இங்குள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது. தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து அருவிகளில் குளித்துச் சென்றனர்.
கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் இன்று காலை நிலவரப்படி அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் குற்றாலம் மெயின் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதுகாப்பு வளைவை தாண்டி உள்ள பாலத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதேபோல் ஐந்தருவியில் 5 கிளைகளும் தெரியாத அளவுக்கு தண்ணீர் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இதன் காரணமாக விடுமுறையில் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து குளிக்க அனுமதி கிடைக்கும் என்று காத்திருந்தனர்.





