
.
மத்திய ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்றது போல் போலி சான்றிதழ் தயாரித்து, தமிழகத்தில் 9 இடங்களில் கூட்டுறவு வங்கி தொடங்கி மோசடி நடைபெற்றுள்ளது. சென்னை அம்பத்தூர், லேடான் தெருவில் ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி என்ற பெயரில் கடந்த ஓராண்டாக வங்கி ஒன்று இயங்கி வந்தது. வங்கியின் கிளைகள் மதுரை, விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருவண்ணாமலை, சேலம் உட்பட 8 இடங்களில் இயங்கியது.
இந்த வங்கியின் தலைவராக சந்திரபோஸ் என்பவர் செயல்பட்டார். அவர் இந்திய ரிசர்வ் வங்கி அங்கீகாரம் கொடுத்தது போன்று போலிச் சான்றிதழ் தயாரித்து இந்த வங்கியைத் தொடங்கியுள்ளார். இதுகுறித்து, ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, கடந்த 5-ம் தேதி அந்த வங்கியின் தலைவர் சந்திரபோஸை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து போலியான பதிவுச் சான்றிதழ், வங்கி ஆவணங்கள், படிவங்கள், முத்திரைகள் மற்றும் சொகுசு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. வங்கிக் கணக்கிலிருந்த ரூ.56 லட்சத்து 65 ஆயிரத்து 336 முடக்கப்பட்டது.
இந்த வழக்கில் திறமையாக துப்பு துலக்கிய சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி மற்றும் அவரது குழுவினரை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று நேரடியாக அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.வங்கி அலுவலர்களை தலா ரூ.2 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு நியமித்ததும் தெரியவந்தது. மேலும், வங்கிக் கணக்கு புத்தகம், காசோலை, முத்திரைகள் மற்றும் படிவங்கள் பயன்படுத்தியதும், போலியான டெபிட் கார்டுகள் தயாரித்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதேபோல், பொதுமக்களிடம் இருந்து வைப்புத்தொகை, சேமிப்பு தொகை ஆகியவற்றைப் பெற்றும், அதிக வட்டி தருவதாகக் கூறி நிரந்தர வைப்புத் தொகைகளைப் பெற்றும் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
பின்னர், காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: போலியாக தொடங்கப்பட்டுள்ள இந்த வங்கியில் 3 ஆயிரம் பேர் கணக்கு தொடங்கியுள்ளனர். சென்னையில் மட்டும் 1,700 பேர் கணக்கு வைத்துள்ளனர். ரிசர்வ் வங்கி அதிகாரியின் புகாரின் பேரில் நடத்திய விசாரணையில்தான் இந்த மோசடி தெரியவந்தது. வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களிடம் இருந்து இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அதில் முக்கிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.