
வெறிச்சோடி காணப்படும் மெரினா கடற்கரை- சென்னையில் கடுமையான கடல் சீற்றம் மாமல்லபுரம், கோவளம், கல்பாக்கம் கடலோர பகுதிகளில் இன்று காலை சாரல் மழை பெய்ய தொடங்கியது. கடலில் அலையின் சீற்றமும் அதிகமாக இருந்தது. இதனால் கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அவசரமாக கரை திரும்பினர்.
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறி உள்ளது. இதற்கு மாண்டஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர். புயல் எச்சரிக்கையை தொடர்ந்து எண்ணூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதையும் படியுங்கள்: சித்தர் பீடத்தில் 7 மணி நேரம் தொடர்ந்து தேஜஸ் சுவாமிகள் சமாதி நிலை தியானம் இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட வட தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று கடல் சீற்றமாக காணப்பட்டது.
மெரினா, பட்டினப்பாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் உள்பட அனைத்து இடங்களிலும் கடலில் ராட்சத அலைகள் எழுந்தன. பல அடி உயரத்துக்கு கடுமையான சீற்றத்துடன் கடல் காணப்பட்டது. இதை தொடர்ந்து மெரினா உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. புயலுக்கு பயந்து மெரினா கடற்கரைக்கு மக்கள் அதிகமாக செல்லவில்லை. ஒரு சிலர் மட்டுமே கடலோர பகுதிகளில் காணப்பட்டனர். அவர்களையும் போலீசார் வெளியேறுமாறு எச்சரித்ததை காண முடிந்தது.
பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் சில மீன் கடைகளே செயல்பட்டன. பெரும்பாலான மீனவர்கள் கடைகளை திறக்காமல் மூடியே வைத்திருந்தனர். புயலால் கடலோர பகுதிகளில் பலத்த காற்றும் வீசுகிறது. படகுகள் காற்றில் தூக்கி வீசப்பட்டு விடக்கூடும் என்பதால் கயிற்றில் கட்டி வைத்திருந்தனர். சென்னை மாநகர் முழுவதுமே குளிர்ந்த காற்று வீசி இதமான சூழல் நிலவியது. லேசான சாரல் மழையும் பெய்து கொண்டே இருக்கிறது. பழவேற்காடு பகுதியில் கடல் அலை பலத்த சீற்றத்துடன் வீசுகிறது. புயல் காரணமாக பழவேற்காட்டை சுற்றி உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள், மீன் பிடி உபகரணங்களை அவர்கள் பத்திரமாக கடல் கரையில் கட்டி வைத்து உள்ளனர். இன்று காலை வழக்கத்தை விட கடலில் குளிர்ந்த காற்று வேகமாக வீசி வருகிறது.
மாமல்லபுரம், கோவளம், கல்பாக்கம் கடலோர பகுதிகளில் இன்று காலை சாரல் மழை பெய்ய தொடங்கியது. கடலில் அலையின் சீற்றமும் அதிகமாக இருந்தது. இதனால் கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அவசரமாக கரை திரும்பினர். கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் (ரேடியேட்டர்) கொதிகலனின் வெப்பத்தை தணிக்க, 1கி.மீ., தொலைவில் கடலில் இருந்து எடுக்கப்படும், கடல் நீர் குழாய்கள் புயல், கடல் சீற்றத்தால் தேசமடைந்து விடாத வண்ணம் அப்பகுதியை அணுமின் நிலைய நிர்வாகத்தினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். மேலும் பேரிடர் மீட்புப்பணிகள் குறித்து அணுமின் நிலைய பாதுகாப்பு ராணுவத்தினர், தீயணைப்பு படையினர், மருத்துவ பிரிவினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஆலோசனை நடத்தி தயார் நிலையில் உள்ளனர்.
கடலூர் துறைமுகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்த நிலையில் இன்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலும் சீற்றமாக காணப்பட்டு வருகிறது. சுமார் 6 அடிக்கு மேல் கடல் அலைகள் கடலூர் தாழங்குடா உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 15 மாவட்டங்களிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீட்பு படையினர் உஷார் நிலையில் உள்ளனர்.