
நிதி அமைச்சர் பேசிய ஆடியோவை ஆய்வு செய்து உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். 12 மணி நேர வேலை மனித வாழ்க்கைக்கு சரியாக வராது. என முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது மேலும் அவர் கூறியதாவது:- நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ புனையப்பட்டதா? இல்லையா? என்பதை அவரே எப்படி கூற முடியும்? நிதி அமைச்சர் பேசிய ஆடியோவை ஆய்வு செய்து உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.
ரூ.30 ஆயிரம் கோடி தொடர்பான அமைச்சரின் ஆடியோ விவகாரத்தில் மத்திய அரசு விசாரிக்க வலியுறுத்துவோம். 12 மணி நேர வேலை மனித வாழ்க்கைக்கு சரியாக வராது. மனித வாழ்க்கை சுவிட்ச் போட்டால் ஓடும் எந்திரம் போன்றது அல்ல. 12 மணி நேர வேலைக்கு தி.மு.க. கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு என்பது தான் ஸ்டாலினின் பண்பாடு. சட்டப்பேரவையில் நான் பேசுவதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆடியோ குறித்து கேட்கப்பட்டது. அப்போது நிதி அமைச்சர் பேசும் ஆடியோ பதிவை செய்தியாளர்களிடம் ஐபேட் வழியே போட்டுக்காட்டிய இபிஎஸ் அமைச்சரே பேசிவிட்டு, புனையப்பட்டது என்று அவரே எப்படிச் சொல்ல முடியும். எனவே இதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
ரூ.30,000 கோடி என்பது சாதாரண விஷயமல்ல. 30,000 கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டது என்று நிதி அமைச்சரே வாக்குமூலம் கொடுத்துள்ளதாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். எல்லா வலைதளங்களிலுமே இது காட்டுத்தீப்போல பரவி வருகிறது.
ஊடகங்கள்தான் வெளியிடவில்லை. எங்களுக்கு பெரிய சந்தேகமே தற்போது அவர் பேசியதுதான். சமூகவலைதளங்களில் இதுபோல நிறைய வருகிறது. அப்போதெல்லாம் அவற்றை நாங்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால், நிதி அமைச்சர் மறுப்பு அறிக்கைவிட்ட பிறகுதான், இதில் ஏதோ இருக்கிறது என்று தோன்றுகிறது. இது அவருடைய குரல்தான்.என்றார் இபிஎஸ்.