
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதால் அதற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வரும் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிசாமி திருச்சி விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் பெருகி உள்ளது என்று சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கையில் நான் ஏற்கெனவே பேசியிருக்கிறேன்.
விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்தும் செங்கல்பட்டில் போலி மதுபானம் குடித்தும் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாக சீர் கெட்டுள்ளது. திறமையற்ற ஒரு பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆள்வதால் இப்படிப்பட்ட கொடுமை எல்லாம் நடைபெறுகிறது.
தமிழக டிஜிபி கஞ்சா விற்பனை தடுக்க 2.0, 4.0 என்று ‘ஓ’ போடுவதை மட்டும் தான்செய்கிறார். காவல்துறை சுதந்திரமாக செயல்பட தமிழக டிஜிபி அனுமதிப்பதில்லை.
முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள் தலையீடு காரணமாக தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
முதல்வர் பதவியேற்ற நாளிலிருந்து தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை, திருட்டு, கஞ்சா விற்பனை, கள்ளச்சாராயம் விற்பனை என்று அமோகமாக நடைபெற்று வருகிறது.
மரக்காணத்தில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாக பத்திரிகையில் வந்த செய்திகளை அரசு கண்டுகொள்ளவில்லை.
இதற்கு முழு பொறுப்பேற்று தமிழகத்தை ஆளும் ஸ்டாலின் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்’ என்றார்.