மீனவர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க உடனடி நடவடிக்கை தேவை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக மீனவர்கள் – பிரச்சனைகளுக்கு – முற்றுப்புள்ளி வைக்க – மாநில அரசும், மத்திய அரசும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும், படகுகள் சேதப்படுத்தப்படுவதும், சிறைப்பிடிக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. இலங்கையில் ராஜபக்ஷே வின் ஆட்சியில் இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்றது. இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை இலங்கை வாழ் தமிழ் மக்களின் ஆதரவினால் புதிய கட்சி ஆட்சியில் அமர்ந்திருக்கின்றது. ஆட்சியில் பொறுப்பேற்ற பின்பு இலங்கை பிரதமர் தமிழக மீனவர் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்றார். மேலும் இலங்கை அதிபர் இந்தியா வந்தபோது மீனவர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளும் விரைவில் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். அதன் மூலம் தீர்வு கிடைக்கும் என்றார். அந்த பேச்சு வார்த்தையும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தற்போது இலங்கையின் புதிய ஆட்சியிலும் தமிழக மீனவர்கள் பிரச்சனைகள் தொடர ஆரம்பித்திருகிறது. நேற்றைய முன்தினம் காரைக்கால், நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலைகளை அறுத்து, 86 மீனவர்களைச் கைது செய்திருக்கிறார்கள். மேலும் 11 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த 29 மீனவர்களும், 3 படகுகளும் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் ராஜபக்ஷே வின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இலங்கையின் புதிய ஆட்சியில் மிகப் பெரிய அளவில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே சிறைப்பிடிக்கப்பட்ட 81 படகுகளை தமிழக மீனவர்களிடம் இதுவரை ஒப்படைக்கவில்லை. சிறைப்பிடிக்கப்பட்ட 81 படகுகளை சரி செய்தும், சேதப்படுத்திய வலைகளுக்கும், படகுகளுக்கும் உரிய நிவாரணமும் மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். இலங்கை அரசிடம் இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளின் பேச்சு வார்த்தை கால தாமதமின்றி உடனடியாக நடக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசும், மத்திய அரசும் இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்வதற்கும், மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர, சுமூக தீர்வு ஏற்படவும், இப்பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
மீனவர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்
Popular Categories


