அதிமுக., ஊராட்சித் தலைவர் கொலை வழக்கில் 10 பேர் மீது வழக்கு

Published:

மதுரை: மதுரை அருகே ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர் கருப்பசாமி (56) கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். மதுரை அருகே உள்ள சிலைமானை அடுத்துள்ள கார்சேரி கிராம பஞ்சாயத்துத் தலைவராக இருந்தவர் கருப்பசாமி (62) அ.தி.மு.க.க் காரரான அவர், அந்தப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். சில நாட்களுக்கு முன்பு கார்சேரியில் பொது நடைபாதையில் கட்டப்பட்ட வீடு குறித்து பிரச்னை எழுந்தது. இதுகுறித்து வழக்கு தொடரப்பட்டது. அதில், அந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்வதற்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் கடந்த 26ஆம் தேதி கிராம அதிகாரி மற்றும் வருவாய் ஊழியர்கள் முன்னிலையில் அந்த வீடுகள் அகற்றப்பட்டன. வீடு அகற்றப்பட்டதற்கு பஞ்சாயத்து தலைவர் கருப்பசாமி தான் காரணம் என்று பாதிக்கப்பட்ட தரப்பினர் நினைத்தனர். இதனால் அவரை தீர்த்துக்கட்ட அவர்கள் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை கருப்பசாமியின் வீடு அருகே பதுங்கியிருந்த 6 பேர் கொண்ட கும்பல் கருப்பசாமியை சரமாரியாக வெட்டியது. மேலும், கருப்பசாமியின் மகன் வீரமணியையும் அந்த கும்பல் கொல்ல முயன்றது. ஆனால் அவர் தப்பிவிட்டார். பலத்த வெட்டுக் காயங்களுடன் உயிருக்குப் போராடி கருப்பசாமி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை நேற்று காலை உயிரிழந்தார். இதுதொடர்பாக சிலைமான் போலீஸார் விசாரணை நடத்தி, கார்சேரி முன்னாள் ஊராட்சித் தலைவர் முனியசாமி, அவரது ஆதரவாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து,தமிழ்ச்செல்வனைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இதற்கிடையில்,கொலையாளிகளை கைது செய்யக்கோரி கார்சேரி பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

Related articles

Recent articles

spot_img