
- மதுரை தெற்கு தொகுதியில் அடிப்படை வசதிகள் இன்றி தொடரும் அவலம்
- மாநகராட்சி அலட்சியத்தால் தொகுதிக்குள் செல்ல முடியாத நிலையால் பதவியே வேண்டாம் என மனநிலையில் உள்ளேன்
- மாநகராட்சி கூட்டத்தில் மனவேதனையை வெளிப்படுத்தி மதிமுக எம்.எல்.ஏ.
மதுரை: மதுரை மாநகராட்சி 19 ஆவது மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் இன்று தொடங்கி நடைபெற்றது இந்த கூட்டத்தில் மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி மதிமுக உறுப்பினர் பூமிநாதன் கலந்து கொண்டு தனது தொகுதியில் உட்பட்ட மாநகராட்சி பகுதிகளில் பணிகள் முறையாக நடைபெறவில்லை எனக் கூறி கோரிக்கை விடுத்து பேசினார்.
அப்போது மேயரை பார்த்து பேசிக்கொண்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதியில் பாதாள சாக்கடை, குடிநீர் ,சாலை வசதிகள் குறித்து பலமுறை மாநகராட்சி கூட்டத்தில் எடுத்து கூறி இல்லை பாதாள சாக்கடை பணிகள் பாதியிலே கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஒப்பந்ததாரரிடம் பலமுறை தொடர்பு கொண்டு பணிகளை விரைவுபடுத்த கூறிய நிலையிலும் கூட ஒப்பந்ததாரர்கள் அலட்சியமாக இருப்பதன் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தொகுதிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவருகிறது தொகுதிக்குள் செல்லும்போது பொதுமக்கள் முற்றுகையிட்டு போராடக்கூடிய நிலை உள்ளது.
எனவே இது போன்ற ஒப்பந்ததாரர்களுக்கு பணி வழங்கக் கூடாது என கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருந்த பூமிநாதன் இதுபோன்று மக்கள் நல பணிகளை தனது தொகுதியில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சியில் போதிய அதிகாரிகள் குறைவு காரணமாக இது போன்ற பணிகள் செயல்படுத்த முடியாத நிலையில் முதலமைச்சரிடமும் மதிமுக தலைவர் வைகோ விடமும் சொல்லிவிட்டு எனக்கு பதவியே வேண்டாம் என்று சொல்லக் கடிய அளவிற்கு மனநிலை உள்ளதாக தெரிவித்தார்.
இதனால் மாமன்ற கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதிகளில் எந்தவித பணிகளும் நடைபெறாமல் இருப்பதாக மனவேதனையை வெளிப்படுத்திய சம்பவம் அரங்கேறியது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பூமிநாதன் :
தனது தொகுதியில் பாதாள சாக்கடை பணிகள் பாதியிலயே கிடப்பில் போடப்பட்டுள்ளதால் தொகுதி பக்கம் செல்லமுடியவில்லை இதனால் கூட்டத்தில் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளேன் என்றார்.





