கடவுள் நம்பிக்கையாளர் ரத்தம் நம்பிக்கையில்லாதவர்களை வாழவைக்கிறது: மு.க.ஸ்டாலின்

Published:

சென்னை:

கடவுள் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் தரக்கூடிய ரத்தம் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்களை வாழவைக்கிறது. அதேபோல கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தரக்கூடிய ரத்தம் கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்களை வாழவைக்கிறது. எனவே பாகுபாடு காட்டாத ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை ஒட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் அவர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது அவர்… மார்ச் 1-ந் தேதி என்பது பாகுபாடு ஒழிக்கக்கூடிய தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்து இன்றைக்கு இந்த நாளை கொண்டாடுகிறது. எனவே, கருணாநிதியின் வழிகாட்டுதலோடு அதை மனதிலே வைத்துக் கொண்டு நாம் பாடுபடவேண்டும். அந்தப் பாகுபாடுகளை ஒழிப்பதற்கு நாம் உறுதி எடுக்க வேண்டும். அப்படிப்பட்ட உறுதியை அந்த சபதத்தை நீங்கள் எல்லாம் ஏற்றால்தான் உள்ளபடியே நீங்கள் எனக்கு சொல்லக்கூடிய வாழ்த்துகள் மகிழ்ச்சிகரமாக அமையும். நம்மைப் பொறுத்தவரையில் இந்த சமுதாயம் வாழவேண்டும்.

இந்த நாடு வாழ்ந்திட வேண்டும். இந்த சமுதாயத்தை, இந்த நாட்டை வாழ வைக்கக் கூடிய வகையில் நம்முடைய பணி அமைந்திட வேண்டும் என்று சொன்னால், நம்முடைய இயக்கம் தொடர்ந்து கருணாநிதி தலைமையில் பீடுநடை போடவேண்டும். இதை நான் என்னுடைய பிறந்த நாள் செய்தியாகத் தெரிவிக்க விரும்புகிறேன். சாதி, மதம், இனம், மொழி இவைகளைப் பொறுத்தவரையிலே யாருக்கும் பாகுபாடு இருக்கக்கூடாது.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடுகள் தீவிரம்!

நம்முடைய தலைவர் கருணாநிதியின் தொலை நோக்கு தான் நம்மை போன்ற இளைஞர்களை இன்றைக்கு ஓரளவுக்கு பக்குவப்படுத்தி, தொடர்ந்து நாம் ஆற்றக்கூடிய பணிகளுக்கு உரமூட்டக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நாம் அனைவரும் ஒன்றுதான் என்பதை நினைவுபடுத்தக்கூடிய வகையில் இந்த மார்ச் 1-ம் நாள் இருந்திட வேண்டும்.

பாகுபாடு காட்டாத ஒரு சமுதாயத்தை உருவாக்கிடவேண்டும். பாகுபாடு ஒழிப்பு கொள்கை என்பதை நம்முடைய உடம்பில் ஓடக்கூடிய ரத்தத்தோடு நிச்சயமாக நாம் ஒப்பிட முடியும். நம் அனைவருடைய நரம்புகளில் ஓடுவது ஒரே ரத்தம்தான் என்பதை நாம் மறந்துவிட முடியாது. எனவே, ரத்தத்தை பொறுத்தவரையிலே பாகுபாடு கிடையாது. இன்னும் நான் வெளிப்படையாக சொல்ல விரும்புகிறேன்.

கடவுள் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் தரக்கூடிய ரத்தம் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்களை வாழவைக்கிறது. அதேபோல கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தரக்கூடிய ரத்தம் கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்களை வாழவைக்கிறது. அதனால்தான் உங்களை எல்லாம் நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

மார்ச் 1-ந் தேதியிலிருந்து இந்த மாத இறுதி வரையிலே தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய இளைஞர்கள், நம்முடைய தொண்டர்கள், ரத்தம் வழங்கக்கூடிய நிகழ்ச்சியை நடத்திட வேண்டும். எனவே, இந்த மாத இறுதிக்குள்ளாக 1 லட்சம் யூனிட் ரத்தம் நம்முடைய இளைஞர் அணியின் சார்பில் வழங்கப்பட்டிருக்கிற இந்த செய்தி வந்தாக வேண்டும்.

இந்த மார்ச் 1-ந் தேதியை இளைஞர் எழுச்சி நாளாக மட்டுமல்ல, பாகுபாடு ஒழிப்பு தினமாகவும் நாம் இன்றைக்கு இதை நடத்துகிறோம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு ரத்ததானம் வழங்குவதற்கு அனைவரும் உறுதி எடுப்போம். சபதம் ஏற்போம். இதுதான் என்னுடைய பிறந்த நாள் செய்தி.

Related articles

Recent articles

spot_img