
சென்னை அரசு ஓய்வூதியர்கள் நேர்காணல் தொடர்பான புதிய நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. ஓய்வூதியர்கள் நேர்காணலை எளிமையாக்க, புதிய நடைமுறையை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
அதன்படி, நேர்காணல் மாதத்தை தெரிந்து கொள்ள https://www.karuvoolam.tn.gov.in/ta/web/tnta/home என்ற இணையதனத்தின் முகப்பு திரையில், ஓய்வூதியர் நேர்காணல் என்ற இணைப்பை, கிளிக் செய்து, தங்கள் ஓய்வூதிய ஆணை எண், ஆதார் எண் ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். பின் தங்கள் பெயர், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், நேர்காணல் மாதம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பு:
ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், சென்னை மாவட்டக் கருவூலங்கள் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியர்கள் குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை கருவூலத்தில் ஆண்டு நேர்காணல் செய்யப்பட வேண்டும்.
கொரோனா பெறும் தொற்று காரணமாக கடந்த 2020 மற்றும் 2021 ம் ஆண்டிற்கான நேர்காணல் தற்காலிகமாக நடைபெறாத நிலையில் தற்போது அரசாணை நிலை எண்: 138 நிதி (ஓய்வூதியம்)த் துறை நாள் 20-06-2022 ன் படி ஓய்வூதியர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப பின்வரும் ஏதேனும் ஒரு முறையை பின்பற்றி இவ்வாண்டிற்கான (2022-23) நேர்காணல் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
1 ஜீவன் பிரமான் இணையதள மின்னணு வாழ்நாள் சான்றிறழ்
தமிழ் நாடு அரசு ஓய்வூதியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்கள் நேரில் கருவூலத்திற்கு வருவதில் ஏற்படும் இடர்ப்பாடுகனைத் தவிர்க்கும் பொருட்டு ஜீவன் பிரமான் இணைய தனம் மூலமாக ஓய்வூதியர்கள் பின்வரும் ஏதேனும் ஒரு சேவை முறையை பின்பற்றி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அ) இந்திய அஞ்சல் துறை வங்கியின் சேவையை பயன்படுத்தி ஓய்வூதியர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தபடியே தபால் துறை பணியாளர்கள் மூலமாக ரூ.70/- கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம்
ஆ) அரசு இ.சேவா மற்றும் பொது சேவை மையங்களின் மூலம் ஓய்வூதியர் குடும்ப ஓய்வூதியர்கள் உரிய கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம்.
இ) ஓய்வூதியர்கள் சங்கத்தின் மூலமாகவும் கைரேகை குறியீட்டு கருவி (Biometric Device) பயன்படுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம்.
ஈ) கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவி இல்லாமல் ஜீவன் பிரமான் முகம் பதிவு செயலி பயன்படுத்தி வீட்டிலிருந்தபடியே மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம்.
மின்னணு வாழ்நாள் சான்று பெற ஓய்வூதியர்கள் அளிக்க வேண்டிய முக்கிய விவரங்கள்:
1) ஆதார் எண்
2) PPO.No
3) வங்கி கணக்கு எண்
4) ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம்
2) வாழ்நாள் சான்றிதழ் படிவத்தினை மூலம் உரிய அலுவலரிடம் கையொப்பம் பெற்று தபால் மூலம் அனுப்புதல்
ஓய்வூதியர்கள் / குடும்ப ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றினை (Life Certificate) www.tn.gov.in/karuvoolam என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கீழ்க்காணும் ஏதேனும் ஓர் அலுவலரிடம் கையொப்பம் பெற்று தபால் மூலமாக தொடர்புடைய கருவூலத்திற்கு அனுப்பி ஆண்டு நேர்காணல் செய்யலாம்.
ஓய்வூதிய வங்கிக் கணக்கு உள்ள வங்கியின் கிளை மேலாளர் (அல்லது) அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர் (அல்லது)
வட்டாட்சியர் / துணை வட்டாட்சியர் அல்லது வருவாய் ஆய்வாளர் அவர்களிடம் சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும்.
வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியர்கள்: மேற்கண்ட இணையதள முகவரியிலிருந்து வாழ்வு சான்றிதழை பதிவிறக்கம் செய்து இந்திய தூதரக அலுவலர் / மாஜிஸ்ரேட் நோட்டரி பப்ளிக் அலுவலரிடம் வாழ்நாள் சான்று (Life Certificate). பெற்று சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு தபால் மூலம் அனுப்பலாம்.
மேலும் ஓவ்வூதியதாரர்கள் தங்களது விருப்பத்தின்படி நேரடி நேர்காணலுக்கு ஓய்வூதிய புத்தகத்துடன் மேற்குறிப்பிட்ட மாதங்களில் ஏதேனும் ஒரு அரசு வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் கருவூலத்திற்குச் சென்று ஆண்டு நேர்காணல் செய்யலாம்
ஓய்வூதியர்கள் ஆண்டு நேர்காணலில் எதும் குறைபாடுகள் இருப்பின் தொடர்புடைய மாவட்டக் கருவூல அலுவலர் மண்டல இணை இயக்குநர் அல்லது சென்னை கருவூல கணக்குத்துறை ஆணையரகத்திற்கு தொலைபேசி மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கலாம்
தமிழ்நாடு மின்வாரியம், ரயில்வே, அஞ்சல்துறை தொழிலாளர் வைப்பு நிதித்திட்டம், மத்திய அரசு ஓய்வூதியர்கள் உள்ளாட்சி மன்ற ஓய்வூதியர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது.