
தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் முக்கிய ஸ்தலமான திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழாவின் சிகர நிகழ்வாக தேரோட்டம் இன்று கோலாகலமாக பக்தர்கள் தேர் வடம்பிடித்து இழுக்க விமர்சையாக நடைபெற்றது.

தமிழகத்தில் பழைமைவாய்ந்த திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனிப் பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த ஜூன் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து திருவிழா நாள்களில் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்மன் வீதியுலா நடை வீதியுலா நடைபெற்றது. நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் பக்தி இன்னிசை, நாட்டியம், கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், சொற்பொழிவு ஆகியன நடைபெற்றன.
எட்டாம் திருநாளான சனிக்கிழமை காலையில் சுவாமி நடராசப் பெருமான் வெள்ளை மற்றும் பச்சை சாத்தி எழுந்தருளி உள்பிரகாரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலையில் சுவாமி கங்காளநாதர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
இரவில் தேர்கடாட்சம் வீதியுலாவும், சுவாமி தங்ககைலாய பர்வத வாகனத்திலும், அம்மன் தங்கக்கிளி வாகனத்திலும் வீதியுலா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு மேல் 4 மணிக்குள் சுவாமி-அம்மன் தேருக்கு எழுந்தருளினர். காலை 8.15 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன், மக்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் திருநெல்வேலி நயினார் நாகேந்திரன், பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப், உள்ளிட்டோர் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
தேரோட்டத்தையொட்டி திருநெல்வேலியின் 4 ரத வீதிகளும் விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நெல்லை தூத்துக்குடி தென்காசி குமரி உட்பட தென்மாவட்ட பக்தர்கள் கேரளாவில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பிரசித்தி பெற்ற ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயில், வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேரோட்டமும் இன்று கோலாகலமாக நடைபெற்றது