
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது என்று பாஜக., தமிழக தலைவர் கே.அண்ணாமலை அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திராவிட இயக்க எழுத்தாளர் திருநாவுக்கரசு இல்லத்திருமண விழா இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்கள் சிற்றரசு- எழிலரசி திருமணத்தை நடத்தி வைத்தார்.
திருமண விழாவில் வழக்கம் போல் தனது அரசியல் கருத்துகளைத் தெரிவித்த மு.க.ஸ்டாலின்,. பிரதமர் மோடி ரூ. 15 லட்சம் தருவதாகப் பேசியதை நிறைவேற்றவில்லை என்று கூறினார்.
“இன்றைக்கு நாம் அறிவித்திருக்கும் திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் அந்தத் திட்டங்களைப் பார்த்து விமர்சனம் செய்து கொண்டிருப்பவர்களைப் பார்த்து நான் கேட்க விரும்புவது, இதே பி.ஜே.பி. ஆட்சி 2014-ம் ஆண்டு பொறுப்பேற்பதற்கு முன்னால் – தேர்தலுக்கு முன்னால் அறிவித்த உறுதிமொழிகளில் ஏதாவது ஒன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறதா?
நான் ஆட்சிக்கு வந்தால் என்று இன்றைக்குப் பிரதமராக இருக்கும் மோடி சொன்னது, வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணங்களை எல்லாம் நான் மீட்டுக்கொண்டு வந்து, அவற்றை எல்லாம் நாட்டில் இருக்கும் மக்களுக்கு ஒரு தலைக்கு – ஒரு நபருக்கு 15 லட்சம் ரூபாய் வழங்குவேன் என்று உறுதிமொழி தந்தார்.
பதினைந்து லட்சம் வேண்டாம், பதினைந்து ஆயிரமாவது வழங்கியிருக்கிறாரா? பதினைந்து ஆயிரம் வேண்டாம், 15 ரூபாயாவது வழங்கியிருக்கிறாரா? கிடையாது. இதுவரை அதைப் பற்றிச் சிந்திக்கவே இல்லை, அதைப் பற்றிக் கேட்கவே இல்லை. அதைப் பற்றி பேசவே இல்லை.” என்று பேசினார்.
இந்நிலையில் மீண்டும் ஸ்டாலின் மனதறிந்து பொய் சொல்லுவதை எடுத்துக் காட்டும் விதத்தில், பிரதமர் மோடி 15 லட்சம் எப்படி எப்போது எங்கே தருவதாகச் சொன்னார் என்ற விளக்கத்துடன் அவர் பேசிய வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார் தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை. அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில்…
“தமிழக முதல்வர் திரு முக ஸ்டாலின் அவர்களுக்கு தோல்வி பயம் மூண்டு விட்டது போல் தெரிகிறது.
ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த பின்னரும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஊழல் ஆட்சியை நடத்திவரும் தமிழக முதல்வர் திரு முக ஸ்டாலின், 2014ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு கொடுக்காத தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்ததாக பேசி வருகிறார்.
அவ்வளவு பணம் வெளிநாட்டில் ஊழல்வாதிகள் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று சொன்னாரே தவிர அந்த பணத்தை ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கி கணக்கில் செலுத்துவோம் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சொல்லவில்லை.
திமுகவினர் போன்ற ஊழல்வாதிகள் என்று பிரதமர் குறிப்பிடவில்லையே, தங்களுக்கு ஏன் இவ்வளவு பதட்டம்?
தங்கள் மருமகன் தான் முறைகேடான பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் வெளிநாட்டு வங்கிகளுடன் தொடர்பில் இருக்கிறாரே. உங்களுக்கு என்ன கவலை?
முதல்வரின் மகன் சம்பந்தப்பட்ட 1000 கோடி ரூபாய் நோபல் ஸ்டீல் ஊழல் பற்றி எப்போது விளக்கம் அளிக்கும், இந்த ஊழல் திமுக அரசு?
கடந்த 9 ஆண்டுகளில், 1.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது என்பதும் நமது நாட்டில் 11 கோடி விவசாய பெருங்குடி மக்களுக்கு வருடம் 6000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருவதும் ஊழல் திமுக அரசின் முதல்வருக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.