ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருஆடிப்பூர திருத்தேரோட்டம்..

Published:

IMG 20230722 WA0108 - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருஆடிப்பூர திருத்தேரோட்டம் இன்று விமர்சையாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்து இழுத்து ஸ்ரீஆண்டாளை தரிசனம் செய்தனர்

வைணவ திருத்தலங்களில் சிறப்பு மிக்கதாக திகழும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பல்வேறு உற்சவங்கள், வைபவங்கள் நடைபெற்ற போதிலும் ஆடிப்பூர திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டாளின் அவதார தினமான ஆடிப்பூரத்தை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் 10 நாட்கள் இந்த திருவிழா நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு ஆண்டாள்-ரெங்கமன்னார் சேர்த்தியில் 16 வண்டி சப்பரத்தில் திருவீதி உலா நடைபெற்றது. விழாவையொட்டி தினமும் ஆண்டாள், ரெங்கமன்னார் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 5-ம் திருநாளான 18-ந்தேதி 5 கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆண்டாள் பெரிய அன்னவாகனம், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீனிவாச பெருமாள், திருத் தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனங்களிலும், பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும் எழுந்தருளி காட்சி அளித்தனர். 7-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவு சயனசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 8-ம் திருநாளான இன்று (சனிக்கிழமை) தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ஆண்டாள், ரெங்கமன்னார் மேளதாளங்களுடன் தேரில் எழுந்தருளினர்.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலை 8.05 மணிக்கு தேரோட்டத்தை பக்தர்கள் முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா…, கோபாலா… என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு தேர் செல்லும் 4 ரதவீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தேர் சக்கரங்கள் பதியாத வகையில் இரும்பு பிளேட்டுகள் போடப்பட்டு இருந்தன. மேலும் வேளாண்மைத்துறை சார்பில் பொக்லைன் எந்திரங்கள் தேரை பின்னால் இருந்து தள்ளும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அதேபோல் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நகராட்சி நிர்வாகம் சார்பில் செய்து தரப்பட்டிருந்தது.

வருகிற 24-ந்தேதி காலை இரட்டை தோளுக்கினியானில் வாழைக்குளத்தெரு தீர்த்தவாரி மண்டபத்தில் எழுந்தருளல் மற்றும் மாலை 6 மணிக்கு மூலஸ்தானம் சேர்தல் நிகழ்ச்சி நடக்கிறது. பன்னிரெண்டாம் திருநாளான 25-ந்தேதி காலை விடாயத்து மண்டபத்தில் உற்சவ சாந்தியும், மாலை 6 மணிக்கு ஆண்டாள்-ரெங்க மன்னார் திவ்ய தம்பதியினருக்கு புஷ்ப யாகமும் நடைபெற உள்ளது. அத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கி.ரவிச்சந்திரன், செயல் அலுவலர் மு.கரு.முத்துராஜா மற்றும் கோவில் பட்டர்கள், ஊழியர்கள், பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img