spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்சோழவந்தானில் கர்ஜித்த சிங்கம்! அசத்தல் வரவேற்பில் அரண்டு போன அண்ணாமலை!

சோழவந்தானில் கர்ஜித்த சிங்கம்! அசத்தல் வரவேற்பில் அரண்டு போன அண்ணாமலை!

- Advertisement -

சோழவந்தான் பகுதியில் என் மனம் என் மக்கள் அண்ணாமலை நடைபயணம் தடபுடலாக நடைபெற்றது.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக முழுவதும் என் மண் என் மக்கள் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். இதில் எட்டாம் நாள் நடை பயணமாக நேற்று மாலை சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்குட்பட்ட தெ.நாராயணபுரம் கிராமத்தில் தன்னுடைய நடை பயணத்தை தொடங்கினார்.

அங்கே கிராம மக்கள் சார்பாக வரவேற்பு நடந்தது. இங்கு உள்ள ஜல்லிக்கட்டு வீரர்கள் தங்களுடைய ஜல்லிக்கட்டு மாட்டுடன் அண்ணாமலையை வரவேற்றனர். இதைத் தொடர்ந்து கிராமத்தில் 40 வருடங்களாக ராணுவ வீரர்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வரும் உணவகத்திற்கு நேரடியாகச் சென்று கடை உரிமையாளர் சுபா தேவி ரவியை பாராட்டினார்.

ஊத்துக்குளியில் ஒரு பெண் அவரை அழைத்து நடைபயணத்தை பாராட்டி வருங்காலத்தில் நீங்கள் தான் முதல்வராக வேண்டும். எங்களுடைய ஆதரவு உங்களுக்குத்தான் என்று தெரிவித்தார். அங்கே இளநீர் குடித்துவிட்டு தொடர்ந்து தென்கரை கிராமத்தில் ஒரு தேநீர் கடையில் தேனீர் அருந்தினார்.

சோழவந்தானில் எம் வி எம் மருது மஹால் அருகே பாஜக மாநில விவசாய அணிச் செயலாளர் மணி முத்தையா, மாநில நிர்வாகி மகாலட்சுமி, கவுன்சிலர் வள்ளி மயில் சிவகாமி உள்பட பாஜக தொண்டர்கள் திரளாக அண்ணாமலையை வரவேற்றனர்.

இங்கு உள்ள மகாலில் உள்ளே சென்று அங்கிருந்தவர்களிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டார். வட்ட பிள்ளையார் கோவில் பஸ் நிலையம், கடைவீதி மாரியம்மன் சன்னதி தெரு, காமராஜர் சிலை வரை நடந்து சென்றார். அங்கிருந்த மக்கள் அவரை வழிநெடுக மலர் தூவி வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து சோழவந்தான் காமராஜர் சிலை முன்பாக நடை பயணத்தை நிறைவு செய்த அண்ணாமலை, பொது மக்களிடம் பாஜக அரசின் சாதனைகள் திமுக அரசின் ஊழல்கள் பற்றி எடுத்துரைத்தார்.

இதில் கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் மாவட்ட ஊடகத் துணைத் தலைவர் சரவணன், சோழவந்தான் மண்டல தலைவர் கதிர்வேல், வாடிப்பட்டி கண்ணன் கோச பெருமாள், முத்துராமன், மூவேந்தர் ரங்கஜி, அழகர்சாமி மற்றும் மேனகா திருவேடகம், நாராயணபுரம் ஊத்துக்குளி தென்கரை சோழவந்தான் மற்றும் வாடிப்பட்டி அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

சமயநல்லூர் டிஎஸ்பி பாலசுந்தரம், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் பால்ராஜு உள்பட 400 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தனது சோழவந்தான் அனுபவம் குறித்து அண்ணாமலை சமூகத் தளத்தில் பதிவு செய்திருப்பதாவது…

இன்றைய #EnMannEnMakkal பயணம், பாண்டியர்களுக்கு எதிராகப் போர் தொடுத்து வந்த சோழன், இந்தப் பகுதியின் செழிப்பைப் பார்த்து உவந்த சோழவந்தானில், பெருந்திரளெனக் கூடியிருந்த மக்கள் மத்தியில், வெகுசிறப்பாக நடந்தேறியது.

புகழ்பெற்ற சோழவந்தான் வெற்றிலைக்கு, புவிசார் குறியீடு வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அரசு. ஜல்லிக்கட்டுப் போட்டியை காட்டுமிராண்டி விளையாட்டு என்று தடை செய்த காங்கிரஸ் திமுக கூட்டணியின் சதியை முறியடித்து, அலங்காநல்லூரின் அடையாளமாகிய ஜல்லிக்கட்டு போட்டிகளை மீண்டும் நடத்த சிறப்புச் சட்டம் இயற்ற வழிவகை செய்தவர் நமது பிரதமர் மோடி அவர்கள்.

மோடியின் முகவரி : சோழவந்தான்

ஒன்பது ஆண்டுகளில் 2802 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ள தேசிய ஊனமுற்றோர் ஓய்வூதியத் திட்டத்தின் பயனாளி சோழவந்தான் பண்ணைக்குடியைச் சேர்ந்த திரு தர்மர், 46 லட்சம் விவசாயிகளுக்கு வருடம் 6000 திட்டத்தின் பயனாளி திரு சின்னா தேவர், விவசாயிகள் செழிக்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற 6225 விவசாய அங்காடிகளில் ஒன்றின் உரிமையாளர் திருமதி சுந்தரி, 48,506 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ள 100 நாள் வேலைத் திட்டத்தின் பயனாளிகளில் ஒருவரான வாடிப்பட்டியைச் சேர்ந்த திருமதி பூரணவள்ளி, e-NAM திட்டத்தின் 37 லட்சம் பயனாளிகளில் ஒருவரான திரு. மணிமாறன், 15 லட்சம் பேர் பயனடைந்துள்ள பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பயனாளிகளில் ஒருவரான திருமதி மனோரஞ்சிதம் இவர்கள் தான் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களின் முகவரி.

கொரோனா காலத்திலிருந்து மூடப்பட்டுக் கிடக்கும், கர்மவீரர் காமராஜரால் திறக்கப்பட்ட அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க திமுக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால், கரும்பு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பல கோடி செலவு செய்து மகனுக்குத் திருமணம் செய்து வைத்த இந்தப் பகுதி அமைச்சர் மூர்த்திக்கு, இந்த ஆலையைத் திறக்க மனம் இல்லை. G-Square ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நலனுக்காக மட்டுமே அமைச்சர் மூர்த்தியின் பத்திரப்பதிவுத் துறை நடக்கிறது.

ஜூலை மாதம், தமிழகத்துக்கு வரவேண்டிய 31 டிஎம்சி காவிரி நீர் வரவில்லை. கர்நாடகா வரை போய், தன் காங்கிரஸ் கூட்டணி நண்பர்களைச் சந்தித்து விருந்து உண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, காவிரியில் தண்ணீர் திறந்து விட, கர்நாடக முதலமைச்சரிடம் சொல்ல தைரியம் இல்லை. கர்நாடகாவிடம் தண்ணீர் திறந்து விடச் சொல்லுங்கள் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதுகிறார். வெறும் நாடகங்களிலேயே ஆட்சி நடத்தி விடலாம் என்று நினைத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். திமுக கூட்டணிக் கட்சி காங்கிரஸிடம் நமது உரிமையான காவிரி நீர் பெற முடியவில்லை என்றால் எதற்கு கூட்டணியில் இருக்கிறீர்கள்? காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காமல் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது. தமிழக மக்கள் நலனை அடகு வைத்து எதற்கு இப்படி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி?

வரும் பாராளுமன்றத் தேர்தலில், இந்த தமிழக மக்கள் விரோத ஊழல் திமுக காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடையும். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியமைப்பது உறுதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe