சென்னை: தமிழக அரசு போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் குறித்த அடுத்த கட்ட பேச்சுவார்த்தை மார்ச் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டை மாநகர போக்குவரத்துப் பயிற்சிப் பள்ளியில் இன்று பிற்பகல் தொடங்கியது. இந்தப் பேச்சுவார்த்தையில் 42 தொழிற்சங்கங்கள் பங்கேற்றன. இதில், தமிழக அரசு அமைத்த 14 பேர் குழு மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பாக தலா 2 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்தப் பேச்சுவார்த்தையின்போது அண்ணா தொழிற்சங்கப் பேரவை, தொழிலாளர் முன்னேற்ற சங்கம் ஆகியவற்றுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டத்தில் தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.இந்தக்கோரிக்கைகளை அரசிடம் கொண்டுசெல்வதாக தமிழக அரசு அமைத்த குழுவினர் உறுதி அளித்தனர். இதனிடையே, இதன் 2 ம் கட்ட பேச்சுவார்த்தை மார்ச் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

