செங்கோட்டை ரயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பில் செயலாளர் கே.ஹெச்.கிருஷ்ணன், செய்தி தொடர்பாளர் ராமன் ஆகியோர், மதுரையில் இருந்து புனலூருக்கு ஆய்வு மேற்கொண்ட மதுரை டிஆர்எம் சரத் ஸ்ரீவத்ஸவாவை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கொடுத்தார்கள். அதில் மதுரை – செங்கோட்டை இரட்டை ரயில் பாதை உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்கள்.
மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்ஸவா, மதுரை புனலூர் தடத்தின் மின் மயமாக்கல் பணிகளை ஆய்வு செய்ய கடந்த 21ம் தேதி வந்திருந்தார். ராஜபாளையம், தென்காசி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு, புனலூருக்குச் சென்றார். அங்கே மின்மயமாக்கல் பணிகளைப் பார்வையிட்டு, பகவதிபுரம் – எடமன் வரையிலான மின்மயமாக்கல் பணிகளை துரிதப் படுத்திவிட்டு, செங்கோட்டைக்கு மாலை 7.10 மணி அளவில் வந்திருந்தார்.
அவரை வரவேற்ற செங்கோட்டை ரயில் பயணிகள் நல சங்கத்தினர், அவருக்கு சால்வை போர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பின்னர், செங்கோட்டை ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப் பட வேண்டிய சில பணிகள் குறித்து தெரிவித்தனர். முக்கியமாக, நடைபாதையில் வழுவழு கற்கள் பதிக்கப் பட்டுள்ளதால், பெரும்பாலான நேரங்களில் மழை பெய்து தண்ணீர் இருக்கும் நடைபாதையில் பயணிகள் வழுக்கி விழுகின்றனர் என்பதால், சொரசொரப்பான கற்களைப் பதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மேலும், இரண்டு லிஃப்ட் – மின்தூக்கிகள் அமைக்கப்பட அனுமதி வழங்கப்பட்டும் இன்னும் அது குறித்து எந்த ஆரம்பக் கட்டப் பணிகளும் நடைபெற வில்லை என்பதை எடுத்துச் சொன்னார்கள். செங்கோட்டையில் முன்பு இருந்தது போல் பிட்லைன் வசதி செய்துதரப்படவேண்டும் என்றும், ரயில்வேக்கு உரிய இடங்கள் பயன்பாட்டில் இல்லாமல் சீரழிந்து வருவதையும் எடுத்துச் சொன்னார்கள்..
பின்னர், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் அளித்தார்கள். அவரும் அதைப் பார்த்துவிட்டு, ஆவன செய்வதாக உறுதியளித்தார்.
மதுரை கோட்ட மேலாளரிடம் வைத்த கோரிக்கைகள்:
1) காலை 4 மணிக்கு சென்னை கொல்லம் எக்ஸ்பிரஸ் மற்றும் மதியம் 3 மணி மதுரை குருவாயூர் எக்ஸ்பிரஸ் இவை தவிர இடையே உள்ள நேரத்தில் கொல்லத்துக்கு தென்காசியிலிருந்து ரயில் இல்லை. எனவே காலை 9 மணிக்கு தென்காசியிலிருந்து கொல்லத்துக்கு ரயில் விடவேண்டும்.
2) தற்போது ஓடும் மதுரை – கோவை, கோவை – மதுரை முன்பதிவில்லா ரயிலை செங்கோட்டைக்கு நீட்டிக்க வேண்டும். தற்போது தென்காசி மாவட்ட மக்களுக்கு கோவைக்கு நேரடி ரயில் இல்லை.
3) செங்கோட்டை மயிலாடுதுறை ரயில்களில் கட்டுக்டங்காத கூட்டம் உள்ளதால் உடனடியாக கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும்.
4) இதே போல செங்கோட்டை – திருநெல்வேலி ரயில்களிலும் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும்
5) கன்னியாகுமரி – புனலூர் ரயில்களை தென்காசி அல்லது செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும்
6)திருநெல்வேலி – பெங்களூர் இடையே அம்பாசமுத்திரம் தென்காசி ராஜபாளையம் விருதுநகர் மதுரை வழியே ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.
7) தென்காசி – விருதுநகர் வழித்தடத்தில் ஓடும் ரயில்கள் தற்போது டீசல் இன்ஜினால் மட்டுமே இயக்கப்படுகின்றன.
விரைவில் மின்சார இன்ஜின்களால் இயங்க ஆவன செய்ய வேண்டும்.இந்த தடத்தில் மார்ச் 23 இறுதியில் மின் இன்ஜின் சோதனை வெற்றிகரமாக நடந்தும் மின்சார இன்ஜின்கள் ஏன் ஆறு மாதங்கள் கடந்த பிறகும் இயக்கப்படவில்லை?
என்ன காரணம்?எப்போது ஓடும்?
8) செங்கோட்டை ரயில் நிலையத்துக்கு 2018-19 ல் சாங்ஷன் ஆன 2 லிப்ட்கள் ( மின் தூக்கிகள்) ஏன் இந்நாள் வரை நிறுவப்படவில்லை?
9) செங்கோட்டை ரயில்நிலையத்துக்கான அம்ருத் பாரத் ரயில் நிலைய முன்னேற்ற திட்டப்பணிகள் எந்த ஆண்டு துவங்கும்?
10)செங்கோட்டையில் பிட்லைன் வசதி வேண்டும்.
11) மதுரையோடு நிற்கும் டில்லி,சண்டிகார் மற்றும் ஏனைய வெளி மாநில ரயில்களை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும்.
12) மும்பையிலிருந்து தென்தமிழகத்துக்கு சிவகாசி ராஜபாளையம் தென்காசி வழியாக ரயில் வேண்டும்.
13) செங்கோட்டை – தென்காசி – விருதுநகர் மற்றும் தென்காசி – திருநெல்வேலி தடங்கள் இரட்டை பாதை தடங்களாக்க ஆவன செய்ய வேண்டும்
14) வாரம் மும்முறை இயங்கும் சிலம்பு விரைவு ரயில் மற்றும் தாம்பரம் செங்கோட்டை விரைவு ரயில் இவை தினசரி ரயில்களாக மாற்றப்பட வேண்டும்
15) சில நாட்களே ஓடி பின்பு நிறுத்தப்பட்ட செங்கோட்டை -தாம்பரம் அந்தியோதயா பகல் நேர ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்.
16) தென்காசி – திருநெல்வேலி இடையே உள்ள ரயில் நிலையங்களின் நடைமேடைகள் 24 பெட்டிகள் உள்ள ரயில்கள் வந்து செல்ல ஏதுவாக நீட்டிப்பு செய்யப்பட வேண்டும்.
17. செங்கோட்டை புனலூர் வழியாக கொல்லத்துக்கு சென்னையிலிருந்தோ தாம்பரத்திலிருந்தோ
ஐயப்ப சீசன் (மண்டலம் மற்றும் மகரவிளக்கு) சமயத்தில் ஸ்பெஷல் ரயில்களை இயக்க ஆணை பிறப்பிக்க வேண்டும்
Chennai to Shencottai Vandhe Bharat rail required