தமிழக அரசின் மணல் கொள்ளையை ‘மறைக்காத’தால்… அதிகாரிக்குக் கிடைத்த தண்டனை இது என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.
தமிழகத்தில் மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவுக்கும் அதிகமாக, மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், அதில் கிடைத்த வருமானத்தை சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்ததாகவும் புகார்கள் பரவலாகக் கூறப்பட்டு வந்தது.
இதை அடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில், 34 இடங்களில் சோதனை நடத்தினர். நீள்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மணல் குவாரி அதிகாரிகள் வீடுகளில் இருந்து 12.82 கோடி ரூபாய் ரொக்கம், தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. இந்த சோதனையைத் தொடர்ந்து, நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொறியளர் பொதுப்பணித்திலகம் மற்றும் 10 மாவட்ட ஆட்சியர்கள் விசாரணைக்கு ஆஜர் ஆகும்படி அமலாக்கத்துறை ‛ சம்மன்’ அனுப்பியது.
முதன்மை பொறியாளர் முத்தையா விசாரணைக்கு ஆஜர் ஆனார். ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. விசாரணைக்கு தடையில்லை எனவும், ஆட்சேபனை மனுவுக்கு, தமிழக அரசும், ஆட்சியர்களும் பதில் அளிக்க மூன்று வாரங்கள் அவகாசம் வழங்கியும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசின் நீர்வளத்துறையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட செயற்பொறியாளர் தேவராஜன் தமிழக அரசு, அமைச்சர் துரைமுருகன், ஐஏஎஸ் அதிகாரிகள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஊடகங்களை கடுமையாக குற்றம்சாட்டி ஒருமையில் பேசிய வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.