‛‛தமிழகத்திற்கும், தமிழ்ப் பண்பாட்டிற்கும் விரோதி திமுக.,” என்று, கன்னியாகுமரியில் இன்று நடைபெற்ற பாஜக., பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றம் சாட்டிப் பேசினார்.
கன்யாகுமரி, அகஸ்தீஸ்வரத்தில் பாஜக., சார்பில் தேர்தல் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், தமிழக பாஜகவில் தனது சமத்துவ மக்கள் கட்சியை இணைத்து தன்னையும் இணைத்துக் கொண்ட சரத்குமார் அவரது மனைவி ராதிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். சரத்குமார் பேசும்போது தான் கட்சியில் இணைத்துக் கொண்ட விதம், காரணம், பிரதமர் மோடியின் சிறப்பு இவை குறித்து மக்களிடம் எடுத்துரைத்தார்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசிய போது, கன்னியாகுமரி மண்ணையும், பிரதமர் மோடியையும் யாராலும் பிரித்துப் பார்க்க முடியாது. இந்த மண்ணில் தான், அன்று மோடி, ஒற்றுமை யாத்திரையை ஆரம்பித்தார். குமரி மண்ணின் மைந்தராக மோடி உள்ளார். நமது நாட்டை வல்லரசு நாடாக மாற்றுவதற்காக உறுதியுடன் இங்கு வந்துள்ளார்.
இண்டி கூட்டணியில் குடும்ப கட்சிகள், வாரிசுகளை பதவியில் அமர்த்தும் கட்சிகளே உள்ளன. மக்களே என் குடும்பம் 142 கோடி இந்தியர்களே எனது குடும்பம் என மோடியின் குடும்பமாக சகோதரராக சகோதரிகளாக உள்ளனர். 400 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கு வெறும் வாய்ச்சொல் கிடையாது. இந்திய மக்களின் உணர்வு.
அடுத்த 25 ஆண்டுகளுக்கான கனவுடன் பிரதமர் மோடி வந்திருக்கிறார். நாட்டில் குடும்ப ஆட்சியை ஒழித்து, தேசத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல உழைத்து வருகிறார். 1892 ல் குமரிக்கு வந்த நரேந்திர தத்தா பாறை மீது அமர்ந்து விவேகானந்தராக மாறினார். தற்போது வந்துள்ள பிரதமர் மோடி ‛விஸ்வகுரு’ ஆக மாறி உள்ளார்.
2047 ல் மோடி தலைமையில் இந்தியா வல்லரசு நாடாகும். குமரி முதல் காஷ்மீர் வரை அனைத்து கட்சிகளும் தேஜ., கூட்டணியில் உள்ளன. 3வது முறையாக மோடி மீண்டும் பிரதமர் ஆவார். இது உறுதி என்று பேசினார்.
கூட்டத்தில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “மோடி தமது 10 ஆண்டு ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு 11 லட்சம் கோடி ரூபாய் கொடுத்துள்ளார். மோடி பிரதமர் ஆன பின் மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடக்கவில்லை. மீனவர் நலனுக்காக தனியாக ஒரு அமைச்சகம் ஏற்படுத்தி 38,500 கோடி ரூபாய், மீனவர் நலனுக்காக ஒதுக்கி உள்ளார்.
இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குமரி, தூத்துக்குடியைச் சேர்ந்த 5 மீனவர்களை ஒரே தொலைபேசி அழைப்பு வாயிலாக பிரதமர் மீட்டார். மீனவர் நலனில் உண்மையான அக்கறையுள்ள தலைவராக மோடி திகழ்கிறார்.
2021 தமிழக சட்டசபைத் தேர்தலில் வேல் யாத்திரை மூலம் 4 எம்.எல்.ஏ.,க்கள் வென்றனர். எண் மண் மக்கள் யாத்திரை மூலம் 40 தொகுதிகளிலும் பாஜக., வெற்றி பெறும். 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக., வெற்றி பெற்று 3வது முறையாக மோடி ஆட்சி அமைப்பது உறுதி” என்றார்.
கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
- பாஜக., அரசின் திட்டங்களை ஒப்பிட்டு எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார் பிரதமர் மோடி
- கேலோ இந்தியாவை நாம் நடத்துகிறோம், அவர்கள் காமன்வெல்த் போட்டியில் ஊழல் செய்தார்கள்.
- தி.மு.க. தமிழ்நாட்டின் வருங்கால, கடந்த கால வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் எதிரி.
- ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு முன்பு தமிழகத்தில் உள்ள பாரம்பரிய கோவில்களுக்கு வந்தேன்.
- அயோத்தி விழாவை தொலைக்காட்சியில் மக்கள் பார்க்க கூட தி.மு.க. அரசு தடை விதித்தது.
- புதிய பாராளுமன்ற கட்டடத்தில் நாங்கள் தமிழகத்தின் பாரம்பரியமான செங்கோலை நிறுவினோம்.
- ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்ட போது திமுகவும், காங்கிரசும் வாயை மூடிக்கொண்டு இருந்தனர்.
- தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டு வந்தது.
- திமுக தமிழ்நாட்டிற்கும், தமிழ் பண்பாட்டிற்கும் எதிரி.
- மாற்று கட்சி தலைவர்களுக்கு குமரியில் இருந்து வரும் முழக்கம் தூக்கத்தை கெடுத்துள்ளது.
1990களில் கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி காஷ்மீருக்கு யாத்திரை சென்றேன். இப்போது காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்துள்ளேன். நாட்டைத் துண்டாட நினைப்பவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்துவிட்டனர். தமிழக மக்களும் வரும் தேர்தலில் தூக்கி எறிவார்கள்.
தமிழகத்தில் இண்டி கூட்டணி எடுபடாது. திமுக., – காங்கிரஸ் கூட்டணி துடைத்து எறியப்படும். இண்டி கூட்டணியின் கர்வத்தை தமிழக மக்கள் அடக்குவார்கள். இண்டி கூட்டணி கட்சிகளின் ஊழல் பட்டியல் மிகவும் நீண்டது. 2ஜி, நிலக்கரி ஊழல், காமன்வெல்த் ஊழல் என ஊழல் பட்டியல் நீளும். ஆட்சிக்கு வந்து கொள்ளை அடிப்பதே இண்டி கூட்டணி கட்சிகளின் இலக்கு.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜக., அலை வீசுகிறது. இண்டி கூட்டணி தமிழகத்தில் எவ்வித வளர்ச்சி திட்டங்களையும் முன்னெடுக்க முடியாது. காங்கிரஸ் ஆட்சியில் முக்கியத் பிரமுகர்களுக்கு ஹெலிகாப்டர் வாங்குவதிலும் ஊழல் செய்தனர்.
கன்னியாகுமரி மக்களை எப்படி சுரண்டலாம் என்று திமுக.,- காங்கிரஸ் கூட்டணி காத்துக் கொண்டுள்ளது. தமிழக மண்ணில் பெரிய மாற்றத்தைக் காண்கிறேன்.
மார்த்தாண்டம் – பார்வதிபுரம் இடையிலான மேம்பாலம் பாஜக., ஆட்சிக்கு வந்த பின்னர்தான் நிறைவேறியது. கன்னியாகுமரி – திருவனந்தபுரம் சிறப்பு வழித்தடத்தை நிறைவேற்றியது பாஜக.,
திமுக., தமிழகத்தின், தமிழ்ப் பண்பாட்டின் எதிரி. சாதாரண எதிரி அல்ல. நமது கடந்த காலத்தையும், பாரம்பரியத்தையும் கண்மூடித்தனமாக எதிர்க்கும் எதிரி.
அயோத்தி கும்பாபிஷேக நிகழ்ச்சியைப் பார்க்க அக்கட்சி விரும்பவில்லை. தமிழகத்தில் டிவி.,யில் காட்டுவதற்கும் தடை விதித்தது. இதனை உச்ச நீதிமன்றம் கண்டித்தது. நமது பண்டாட்டின் மீது திமுக., வெறுப்பைக் கக்குகிறது. இண்டி கூட்டணி கன்னியாகுமரி மக்களை வஞ்சிக்கிறது. மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த ஜோ.டி.குரூஸ் ஆற்றிய பணிகளை மனதாரப் பாராட்டுகிறேன்.
ரயில்வே பணிகளுக்காக 6,300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக வளர்ச்சிக்கு திமுக., எதிரியாக உள்ளது!
தமிழ்ப் பாரம்பரியத்தை எதிர்க்கும் செயலையும் திமுக., செய்து வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு காங்கிரஸ் அரசு தடை விதித்த போது திமுக., அமைதியாக வேடிக்கை பார்த்தது. ஆனால், ஜல்லிக்கட்டை பாஜக., அரசு தான் மீட்டெடுத்தது. ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பெருமை. தமிழகத்தின் பாரம்பரியமிக்க சிறப்பு அம்சங்களை மோடி இருக்கும் வரை யாராலும் அசைக்க முடியாது. நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவுவதை திமுக., புறக்கணித்தது. இனிமேல் தமிழகத்தின் பெருமையை யாராலும் புறக்கணிக்க முடியாது. மோடி அதனை அனுமதிக்க மாட்டேன். இது மோடியின் உத்தரவாதம்!
கன்னியாகுமரியில் இவ்வளவு பெரிய ஆதரவுக் குரலை கேட்டு தில்லியில் எதிர்க்கட்சிகளுக்கு தூக்கம் போய்விட்டது. உங்களின் அன்பும், பாசமும் ஆதரவும் மோடிக்கு மட்டுமல்ல, மொத்த இந்தியாவிற்கும் பலம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
இண்டி கூட்டணியினர் தமிழக மக்களின் உயிரோடு விளையாடும் குற்றத்தைச் செய்தவர்கள். திமுக- காங்கிரஸ் செய்த தவறுக்கும் பாவத்திற்கும் பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
பாஜக.., அரசு பெண்களுக்கான அரசு. பெண்களுக்கு ஆதரவு அளிக்கும் அரசு. ‛இண்டி ‘ கூட்டணிக்கு பெண்களை ஏமாற்ற மட்டும்தான் தெரியும். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு பெரிய மரியாதை கொடுக்கும் அரசு பாஜக., அரசு.
என்னால் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. தமிழைக் கற்காதது மிகப்பெரிய குறையாகவே எனக்கு உள்ளது. அந்தக் குறையைப் போக்க, இனி தொழில்நுட்ப உதவியுடன் தமிழ் மொழியில் பேசுவேன். இனி சமூக ஊடகங்களில், நமோ செயலியில், தமிழில் என்னுடைய குரலில் பேசுவேன். அண்ணாமலை அதைப் பற்றி சொல்வார்.. என்று கூறி முடித்துக் கொண்டார் பிரதமர் மோடி.
சமூக ஊடகம், நமோ செயலியில் நமோ தமிழ் மூலம் பிரதமர் தமிழ் மொழியில் பேசுவது குறித்து விளக்கம் தரச் சொன்னதால், மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அதுகுறித்து பொதுக்கூட்டத்தில் விளக்கினார். ”செயற்கை நண்ணறிவைப் பயன்படுத்தி நமோ தமிழ் பக்கத்தில், பிரதமரின் பேச்சு அவரின் குரலில் அதே உணர்வில் வீடியோவாக வரும். இதனை, எல்லா சமூக வலைதளப் பக்கங்களிலும் நாம் எடுத்துச் செல்ல வேண்டும். தமிழகத்துக்கு பிரதமர் வரும் போது இங்குள்ள உரைகள் மட்டுமல்லாது, தமிழகத்துக்கு வெளியே மற்ற மாநிலங்களிலும் சென்று பிரதமர் பேசிய உரைகளின் முக்கிய அம்சங்களை தமிழில் கேட்கலாம். அதனை நீங்கள் கேட்பதுடன் மற்றவர்களையும் கேட்கச் செய்ய வேண்டும். ‛மன் கி பாத் ‘ நிகழ்ச்சி போன்று பிரதமர் மோடியின் பேச்சை நமோ செயலியில் நாம் தமிழிலேயே கேட்கலாம்“.” என்று விளக்கினார்.